பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்க காரணம், தொழில்நுட்ப கோளாறு இல்லை, ஹேக்கர்கள் கைவரிசை!
லண்டன்: பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை ஹேக் செய்தது தாங்கள்தான் என்று லிசார்ட் ஸ்குவாட் குழு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.
பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்கள் சுமார் ஒரு மணிநேரமாக இன்று முடங்கிப்போனது. இதுகுறித்த பரபரப்பு உலகமெங்கும் பரவிய நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இதுபோல நிகழ்ந்ததாக அந்த நிறுவனங்கள் விளக்கம் கொடுத்தன. ஆனால் இரண்டும் ஒரே நேரத்தில் எப்படி தொழில்நுட்ப கோளாறால் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற சந்தேகம் வலைஞர்களுக்கு விலகாமலே இருந்துவந்தது.
இந்நிலையில், லிசார்ட் ஸ்குவாட் என்ற ஹேக்கர் குழு, இந்த முடக்கத்திற்காக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இவ்விரு நிறுவனங்களிலும் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை உலகத்திற்கு காட்டவே ஹேக் செய்தோம் என்று அந்த குழு கூறியுள்ளது.
பிபிசி ரேடியோ5 நேரடி ஒலிபரப்பில் பேசிய ஹேக்கர் குரூப்பை சேர்ந்த நபர் "பன்னாட்டு நிறுவனங்களின் பாதுகாப்பு ஓட்டையை கண்டுபிடிப்பதில் எனக்கு அலாதி பிரியம். ஆனால், நான்தான் பெரிய ஹேக்கர் என்று பீற்றிக்கொள்ள மாட்டேன். என்னைவிட திறமையான ஹேக்கர்கள் உள்ளனர். ஆனால் எனது வேலையை நான் சரியாக செய்வேன் என்பதை பெருமையாக கூறிக்கொள்ள முடியும்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த நபர் கூறுகையில், எனது நண்பர்களுக்கு, கிளப், பார்ட்டி போன்றவற்றுக்கு செல்ல பிடிக்கும். ஆனால், நான் வீட்டில் இருந்து கொண்டே, இதுபோல புதிதாக எதையாவது முயற்சி செய்துபார்ப்பது வழக்கம். இது பலருக்கு தவறாக தெரியலாம். ஆனால் நானாக தேர்ந்தெடுத்த பொழுதுபோக்குதான் இது. சர்வதேச நிறுவனங்கள், தங்களது இணைய பாதுகாப்பை இனியாவது மேம்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.
சோனி பிளே ஸ்டேஷனில் நடந்த மிகப்பெரிய ஹேக்கிங்கிற்கும் இதே குழுதான் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.