திறக்கப்படும் ராஃபா எல்லை! அடங்காமல் திமிரும் இஸ்ரேல்.. எகிப்து வைத்த முக்கிய குற்றச்சாட்டு
காசா: காசா மீது இஸ்ரேல் தனது முழு பலத்தையும் பயன்படுத்தி தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ராஃபா எல்லை வழியாக மருத்துவ உதவி பொருட்கள் இன்று காலை செல்ல இருக்கிறது.
இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் கிளர்ச்சி குழுக்கள் ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுப்பதும், அதற்கு எதிராக இஸ்ரேல் அதிரடி தாக்குதலை நடத்துவதும் பாலஸ்தீனத்தில் அடிக்கடி நடந்து வரும் சம்பவங்களாகும். ஆனால் கடந்த 2021ம் ஆண்டு அன்று 11 நாள் நடைபெற்ற போருக்கு பின்னர் பாலஸ்தீனத்தில் சற்றே அமைதி நிலவியது. இதனையடுத்து கடந்த 7ம் தேதி இந்த அமைதியை குலைக்கும் வண்ணம் ஹமாஸ், இஸ்ரேல் மீது திடீரென ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்ரேல்தான் பலமான நாடு என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில், இந்த ஏவுகணை தாக்குதல் அந்நாட்டின் ஆத்திரத்தை அதிகமாக தூண்டியது. இந்த தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். அதேபோல பாராசூட் மூலம் இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பெண்களையும், குழந்தைகளையும், ராணுவ வீரர்களையும் பிணை கைதிகளாக பிடித்து சென்றனர். இந்த கைதிகளை வைத்துதான் தற்போது இஸ்ரேலுக்கு, ஹமாஸ் போக்கு காட்டி வருகிறது. ஹமாஸின் இந்த பயங்கரவாத தாக்குதலை அமெரிக்கா, பிரிட்டன் தொடங்கி பெரும்பாலான மேற்கு நாடுகள் கண்டித்திருக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேல், காசா மீது அதிரடி தாக்குதலை தொடுத்திருக்கிறது. கடந்த 10 நாட்களாக வான்வழி தாக்குதலை மேற்கொண்ட இஸ்ரேல் தற்போது தரை வழியாக ஊடுருவி வருகிறது. இதுவரை நடத்தப்பட்ட பதில் தாக்குதலில் தங்கள் நாட்டை சேர்ந்த சில பிணை கைதிகளை மீட்டிருக்கின்றனர். இருப்பினும் இன்னும் அதிகமான பிணை கைதிகளை இஸ்ரேல் மீட்க வேண்டியிருக்கிறது. மட்டுமல்லாது காசாவையும், ஹமாஸ் படையையும் முற்றிலுமாக அழிப்போம் என இஸ்ரேலிய ராணுவம் உறுதியேற்றுள்ளதால், இந்த தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
தற்போது வரை காசாவில் 450 குழந்தைகள் உட்பட 2,808 பேர் உயிரிழந்துள்ளனர். அதேபோல 10,900 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களுக்கான மருத்துவ சிகிச்சையை அளிக்க போதுமான அளவில் மருத்துவ உபகரணங்கள், மருந்து பொருட்கள் தற்போது காசா வசம் கிடையாது. குடியிருப்புகள் மீதும் இஸ்ரேல் குண்டுகளை வீசுவதால், சுமார் 4.25 லட்சம் மக்களை ஐநா, பள்ளிக்கூடங்களில் தங்க வைத்திருகிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் தவிர்த்து 15 மருத்துவர்களும் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். மேலும் 23 ஆம்புலன்ஸ்கள், 10 மருத்துவமனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்த உலக சுகாதார அமைப்பின் விமானம் நேற்று எகிப்தில் தரையிறங்கியுள்ளது. காசாவுடன் இணைக்கும் தங்கள் நாட்டின் ராஃபா எல்லை பகுதியை எகிப்து கான்கிரீட் கொண்டு மூடி வருகிறது. இந்த பகுதிக்குதான் பாலஸ்தீன மக்களை போக சொல்லி இஸ்ரேலிய ராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மக்கள் இடம்பெயர மறுப்பு தெரிவித்து வருகின்றனர். மட்டுமல்லாது குறைந்த நேரத்தில் லட்சக்கணக்கான மக்களை இடம்பெயர சொல்வது ஏற்கத்தக்கது அல்ல என்று ஐநா இஸ்ரேலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.
தற்போது உலக சுகாதார மையம் கொண்டுவந்துள்ள மருந்துகளில் இதய நோய்கள், உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், கர்ப்பிணிகளுக்கு தேவையான மருந்துகள் இருக்கின்றன. ஒட்டுமொத்தமாக 3 லட்சம் பேருக்கு தேவையான மருந்துகள் இருக்கின்றன. இந்நிலையில் இந்த பொருட்களை இஸ்ரேல் காசாவுக்குள் அனுமதிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் எழுந்து வருகின்றன. என்னதான் உலக சுகாதார அமைப்பாக இருந்தாலும், இஸ்ரேலை மீறி காசாவுக்குள் அதனால் செல்ல முடியவில்லை.
இப்படி இருக்கையில் ராஃபா எல்லையை திறப்பது, அது வழியாக உதவி பொருட்களை அனுப்புவது தொடர்பாக எகிப்து, அமெரிக்கா, இஸ்ரேல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேல் உதவியை அனுப்ப ஒப்புக்கொண்டது. இந்நிலையில் இஸ்ரேல் நேர நிலவரப்படி காலை 9 மணிக்கு ராஃபா எல்லை வழியாக உலக சுகாதார அமைப்பின் உதவி பொருட்கள் செல்லும் என சொல்லப்பட்டுள்ளது. தற்போதுவரை காசாவிலிருந்து 10 லட்சம் பேர் வெளியேறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று ராஃபா எல்லை திறக்கப்பட்டாலும் இஸ்ரேல் ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே உதவி பொருட்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கப்படும். ஆனால் இப்போது வரை இஸ்ரேல் உரிய ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என எகிப்து விமர்சித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications