ராஜஸ்தான் கிராமத்திற்கு டிரம்ப் பெயர்!
வாஷிங்டன்: ராஜஸ்தானில் உள்ள கிராமத்திற்கு டிரம்ப் பெயர் சூட்டப்படும் என்று சுலப் இன்டர்நேஷனல் அமைப்பின் நிறுவனரும், தலைவருமான பிந்தேஷ்வர் பதக் கூறியுள்ளார்.
மேவாட் பகுதியில் உள்ள கிராமத்திற்குத்தான் இந்த பெயரை சூட்டப் போவதாக பிந்தேஷ்வர் கூறியுள்ளார். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்க அதிபரின் பெயரை கிராமத்திற்கு சூட்டவுள்ளதாகவும் பிந்தேஷ்வர் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் இந்திய சமூகத்தினரிடையே பேசும்போது பிந்தேஷ்வர் மேலும் கூறுகையில், இந்தியாவில் மக்களுக்கு சிறந்த கழிப்பிட வசதியை செய்து கொடுப்பதில் சுலப் இன்டர்நேஷனல் முன்னணியில் உள்ளது. மேலும் மனிதர்களைக் கொண்டு மனிதக் கழிவுகளை அகற்றும் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் பாடுபட்டு வருகிறோம்.
இந்திய அமெரிக்க சமுதாயம், இந்தியாவின் தூய்மைப் பணிகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் தர வேண்டும். இரு நாட்டு நல்லுறவை வலுப்படுத்தும் வகையில் இந்திய அமெரிக்கர்கள் செயல்பட வேண்டும். இதை உறுதிப்படுத்தும் வகையில் ராஜஸ்தானின் மேவாட் பிராந்தியத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதிபர் டிரம்ப் பெயர் சூட்டப்படும்.
பிரதமர் மோடி ஜூன் 26ம் தேதி அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பை சந்திக்கவுள்ளார். இந்த நிலையில் பிந்தேஷ்வர் பதக்கின் அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.