இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ.41,000 பரிசு.. ஊழியர்களை உற்சாகப்படுத்தும் ஜப்பான் நிறுவனம்
இரவில் நன்றாக தூங்கும் ஊழியர்களுக்கு பரிசுத் தொகை தருவதாக அறிவித்துள்ளது ஜப்பான் நிறுவனம்.
டோக்கியோ: ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தினமும் இரவில் 6 மணி நேரம் தூங்கினால் ரூ. 41 ஆயிரம் பரிசு தருவதாக புதிய திட்டத்தை அறிவித்துள்ளது ஜப்பான் நிறுவனம் ஒன்று.
சமீபகாலமாக பலரது முக்கியப் பிரச்சினையாக உள்ளது இரவில் போதுமான அளவு தூங்காமல் இருப்பது தான். செல்போன் பயன்படுத்துவது, வேலைப்பளு எனப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், மக்களின் இரவில் தூங்கும் நேரம் குறைந்து வருவது மறுக்கமுடியாதது. இரவில் சரிவர தூங்காமல் இருப்பதால் மன அழுத்தம், கவனமின்மை, தலைவலி என பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
இதனால், தங்கள் உற்பத்தியும், வேலையும் பாதிப்பதாக நினைத்த ஜப்பான் நிறுவனம் ஒன்று தனது ஊழியர்களுக்கு நிம்மதியாக தூங்க பணம் பரிசாக தருவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள கிரேசி இன்டர்நேஷனல் எனும் நிறுவனம் தான் இந்தப் புதுவிதமான திட்டத்தை அமல்படுத்தி உள்ளது.
[ஜவுளிக் கடைகளில் இனி உட்கார்ந்து வேலை செய்யலாம்.. கேரளாவில் இன்னொரு புரட்சிகர முடிவு!]

கண்காணிக்கும் ஆப்:
இதுதொடர்பாக அந்த நிறுவனம் கூறுகையில், "ஊழியர்களின் செல்போனில் ஒரு ஆப்ஸ் பதிவேற்றம் செய்யப்படும். ஊழியர்கள் ஆன் செய்து வைத்துத் தூங்கும்போது, அந்த ஆப்ஸ் தூங்கும் ஊழியர்களைக் கண்காணிக்கும். நாள் ஒன்றுக்கு இரவில் 6 மணிநேரம் அயர்ந்து தூங்கும் ஊழியர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும்.

மகிழ்ச்சி முக்கியம்:
இதன்மூலம், ஊழியர்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. ஊழியர்கள் தூங்குவதற்கு பரிசளிப்பதுடன் நாங்கள் நின்று விடுவதில்லை. சிறந்த சத்துள்ள உணவு, உடற்பயிற்சிகள் செய்யவும் அறிவுறுத்துகிறோம், அலுவலகத்தில் எப்போதும் அன்பான, மகிழ்ச்சியான சூழல் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறோம். விடுமுறை நாளில் அவர்களைச் சுற்றுலாவுக்கும் அழைத்துச் செல்கிறோம்" என அறிவித்துள்ளது.

41 ஆயிரம் பரிசு:
வாரத்தில் ஐந்து நாட்கள் இரவு 6 மணி நேரம் தூங்கினாலும் போதுமானது என்கிறது இந்த நிறுவனம். இது தொடர்பான ஆப்பில் ஊழியர்களின் தூங்கும் நேரம் கணக்கிடப்படும். விதிமுறைகள் படி சரியாக தூங்கிய ஊழியர்களுக்கு ஆண்டு முடிவில் இந்திய மதிப்பில் ரூ. 41 ஆயிரம் பரிசாக வழங்கப்படும். இதனை நிறுவனத்தின் அங்காடியில் உள்ள பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாராட்டு:
பார்க்கும் வேலைக்கு சம்பளம் கொடுப்பதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதாமல், ஊழியர்களின் உடல்நலத்தில் அக்கறைக் கொண்டு இத்தகைய திட்டத்தை அறிவித்துள்ள கிரேசி நிறுவனத்திற்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் குவிந்தவண்ணம் உள்ளன.












Click it and Unblock the Notifications