நெருங்கும் ‘நவுல்’... பிலிப்பைன்ஸில் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்!
மணிலா: நவுல் புயல் தாக்க உள்ளதால், பிலிப்பைன்ஸ் நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் நவுல் என்ற புயல், இன்று தாக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. இந்தப் புயலால் பிலிப்பைன்ஸ் நாட்டின் வடகிழக்குப் பகுதி பெரும் பாதிப்புக்கு ஆளாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 160 முதல் 195 கிமீ வேகத்தை தாண்டி சூறாவளி காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்தப் புயல், அங்கு அரிசி விளைச்சலில் முக்கியமான பிராந்தியமான ககாயன், இசபெல்லா மாகாணங்களை தாக்கி விட்டு, வலுவிழந்து, சியர்ரா மத்ரேயை கடந்து வடகிழக்கில் உள்ள லுசானை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக 19 இடங்களில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, லுசான் தீவில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் அப்புறப்படுத்தப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புயலை காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதால், பொதுமக்கள் வெளி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும், 1000க்கும் அதிகமான கப்பல்கள் 10 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகளுடன் ஆங்காங்கே கடலில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. பிலிப்பைன்ஸ் வரும் 6 விமானங்களை சிபு பசிபிக் ரத்து செய்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்டிற்கு சுமார் 20க்கும் மேற்பட்ட புயல்கள் தாக்குகின்றன. இதுவரை பதிவான புயல்களில், கடந்த 2013ம் ஆண்டு பிலிப்பைன்ஸை தாக்கிய ஹையான் புயல் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. இதில் சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.












Click it and Unblock the Notifications