‘டொம்டாட்டோ’: ஒரே செடியில் மேலே ‘தக்காளி’,வேரில் ‘உருளை’ விளையும் விநோதம்
லண்டன்: ஒரே செடியில் மேலே தக்காளியும், வேரில் உருளை கிழங்கும் காய்க்கும் வண்ணம் இங்கிலாந்தில் புதிய செடி ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
தாம்சன் அண்டு மார்கன் என்ற நிறுவனம் விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் பணியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக ஒரே செடியில் இரு வேறு காய்களை விளைவிக்கும் நவீன உத்தியை தற்போது கண்டறிந்துள்ளது.
அதன்படி உருளைக் கிழங்கையும், தக்காளியையும் ஒரே செடியில் விளைவித்து அறுவடையும் செய்துள்ளது.
நம்பினால், நம்புங்கள்....
தக்காளி செடி போன்ற தோற்றத்தில் தக்காளி காய்த்துக் குலுங்கும், இச்செடியின் வேரில் உருளைக் கிழக்கு கொத்துக் கொத்தாக காய்த்துத் தொங்குகிறது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்.
டொம்டாட்டோ...
ஆனால், உண்மை அது தான். டொம்டாட்டோ என பெயரிடப்பட்டுள்ள இச்செடி, ஒரே நேரத்தில் உருளையையும், தக்காளியையும் பயிர் செய்யும் திறன் கொண்டது.
கடினமான காரியம்....
இந்த விநோதச் செடி குறித்து தாம்சன் அண்ட் மார்கன் நிறுவன தலைவர் பவுல் ஹான்சர்டு கூறுகையில், ‘இரு வெவ்வேறு காய்கறிகளை ஒரே செடியில் விளைவிப்பது மிகவும் கடினமான காரியம்.
இயற்கையான முறையில்...
மரபியல் மாற்றங்களை செய்து இதற்கு முன் இது போன்ற செயல்களில் விஞ்ஞானிகள் வெற்றி கண்டுள்ளனர். எனினும் அவ்வகையான மாற்றங்கள் செய்யாமல், இயற்கையான முறையில் இரு செடிகளை இணைத்து அவற்றில் விளையும் காய்கறிகளை, ஒரே செடியில் முதல் முறையாக விளைவித்துள்ளோம்.
ஒரே தொட்டியில்....
இரு தாவரங்களின் திசுக்களையும் பிரித்து ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பின் இரண்டும் ஒன்றாக ஒரே தொட்டியில் வளர்க்கப்பட்டன.
விவசாயிகளுக்கு லாபம்...
இதன் பின் சரியான நேரத்தில் தக்காளிகள் காய்க்கத் துவங்கின, வேர்ப் பகுதியில் உருளைக்கிழங்கும் முளைத்திருந்தது. சோதனை முறையில் மட்டுமின்றி வியாபார ரீதியாகவும் இந்த முறை வெற்றி பெற்றுள்ளது.
ருசியான விளைச்சல்....
மேலும், இதில் விளையும் காய்கறிகள் மிகுந்த சுவையுடன் இருக்கிறது' எனத் தெரிவித்துள்ளார்.