ஆபத்தான ‘கோபால்ட் 60’ மெக்ஸிகோவில் திருட்டு: சர்வதேச அணுசக்தி மையம் எச்சரிக்கை
வியன்னா: மிகவும் ஆபத்தான கதிரியக்கப் பொருட்கள் மெக்சிகோவில் திருட்டு போயுள்ளதாகவும், அவற்றை பயன் படுத்தி மர்ம நபர்கள் சதி வேலைகளில் ஈடுபட அதிக வாய்ப்பிருப்பதாகவும் சர்வதேச அணுசக்தி மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மெக்சிகோவின் வடக்குப்பகுதியில் உள்ள டிஜூவானா நகரில் இயங்கிவரும் மருத்துவமனை ஒன்றிலிருந்து மருத்துவ சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கதிரியக்கப் பொருளான ‘டர்ட்டி பாம்' என அழைக்கப் படும் ‘கோபால்ட் -60' கடந்த 2ம் தேதி, ஒரு டிரக்கில் பாதுகாப்பாக ஏற்றப்பட்டு கதிரியக்க கழிவு சேமிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த டிரக், மெக்சிகோ அருகே உள்ள டேபோஜாகோ என்ற இடத்தில் மர்ம நபர்களால் கடத்தப் பட்டது. இத்தகவலை நேற்று வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி மையம் உறுதி செய்துள்ளது.
ட்ரக்கானது திருடப்பட்ட வேளையில் அதன் உள்ளே இருந்த கதிரியக்கப் பொருள் பாதுகாப்பாக வைக்கப் பட்டிருந்தது என்ற போதும், கடத்தியவர்கள் கவனக் குறைவாக செயல்பட்டால் மிகவும் ஆபத்தை விளைவிக்கும் சூழல் உண்டாகலாம் என அம்மையம் அச்சம் தெரிவித்துள்ளது.
கோபால்ட்-60 என்பது சிகிச்சைக்குப் பயன் படுத்தப் படும் கதிரியக்க்கப் பொருள் என்ற போதும், அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும் திறன் மிக்கது. இந்த மூலப்பொருளை வழக்கமான அணு ஆயுதங்களில் பயன்படுத்த முடியாது. எனினும், வெடிகுண்டுகள் மூலம் இவை வெளிப்படுத்தப்பட முடியும். அப்போது மிகவும் பெரிய அளவிலான பாதிப்புகளை இது ஏற்படுத்தக்கூடும் என அம்மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருடு போயுள்ள கதிரியக்கப் பொருளைத் தேடும் பணியில், மெக்சிகோவின் அணு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். ஆனபோதும், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அவர்கள் எச்சரிக்கை செய்தி ஒன்றையும் வெளியிட்டுள்ளதாக வியன்னா அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேபோல், உலகம் முழுவதிலும் போதிய பாதுகாப்பில்லாமல் மருத்துவமனைகளிலும், மற்ற இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் இதுபோன்ற கதிரியக்கப் பொருட்களால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நிபுணர்கள் நீண்டகாலமாகவே எச்சரித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications