நவாஸ் வேண்டுகோள் புறக்கணிப்பு: ஆயுதங்களைக் கீழே போட பாகிஸ்தான் தலிபான்கள் மறுப்பு
இஸ்லாமாபாத்: அரசியலமைப்பு சட்டத்துக்கும் கட்டுப்பட முடியாது, அதேசமயம் ஆயுதங்களையும் கீழேபோட முடியாது என பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.
சமீபத்தில், பாகிஸ்தான் அரசுடன் சமாதான பேச்சுவார்த்தைக்கு தலிபான்கள் விரும்பினால் ஆயுதங்களை தூர எறிந்து விட்டு பாகிஸ்தானின் அரசியலமைப்பு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர்கள் அறிவிக்க வேண்டும் என கருத்து தெரிவித்திருந்தார் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்.
நவாப் ஷெரீப் கருத்துக்கு பதிலடி தரும் வகையில் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கம். இது குறித்து தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு அவ்வியக்கத்தின் செய்தி தொடர்பாளர் ஷஹிதுல்லா ஷஹித் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்திருப்பதாவது.....

பாகிஸ்தானுக்கு அதிகாரமில்லை....
எங்களது நிலைப்பாட்டை நாங்கள் ஏற்கனவே விளக்கி விட்டோம். எங்களோடு பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் அரசுக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அந்த அதிகாரம் ராணுவத்திடமும் அமெரிக்காவிடமும் மட்டும்தான் உள்ளது.

பரிசீலனை....
எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அதிகாரம் தங்களுக்கு உண்டு என்று அரசு நிரூபித்தால் அதன்பின்னர் அரசுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவது தொடர்பாக நாங்கள் பரிசீலனை செய்வோம்.

நிரூபணம்....
அந்த அதிகாரம் தன்னிடம் இல்லை என்பதை நவாஸ் ஷெரீப் நிரூபித்துள்ளார்.

முன்னுக்குப்பின் முரணான பேச்சு....
பாகிஸ்தானில் இருக்கும்போது அவர் ஒருமாதிரியாக பேசுகிறார். தற்போது, அமெரிக்காவில் இருந்துக்கொண்டு பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை விதித்து பேசுகிறார்.

பேச்சுவார்த்தைக்கு அவசியமில்லையே...
ஆயுதங்களை கீழேபோட்டுவிட்டு அரசியலமைப்பு சட்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என இப்போது அவர் கூறுகிறார். இதற்கு நாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அவசியமே இல்லை' என இவ்வாறு அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications