பாகிஸ்தானுக்கு சப்போர்ட் இருக்கட்டும்! உங்க பொருளாதாரத்தை எப்ப காப்பாத்த போறீங்க? சிக்கலில் துருக்கி
அங்காரா: பாகிஸ்தானுக்கு துருக்கி சப்போர்ட் செய்திருப்பது சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், துருக்கி பொருளாதார ரீதியாக கடுமையாக சரிவடைந்து வருகிறது. இதனை எப்போது சரி செய்யப்போகிறது என்கிற கேள்வி எழுந்நிருக்கிறது.
இந்தியாவை காட்டிலும் துருக்கியில் பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. பணவீக்கம் மட்டுமல்லாது அங்கு வாழ்க்கை செலவும் அதிகம்.

இப்படியே போனால் பாகிஸ்தான், காசா என மோசமான பொருளாதாரம் கொண்ட நாடுகள் வரிசையில் துருக்கியும் சேர்ந்துவிடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய தேதியில் ஐரோப்பிய நாடுகளில் அதிக பணவீக்கம் கொண்ட நாடு துருக்கிதான். பணவீக்கம் வரிசையில் துருக்கி சர்வதேச அளவில் 6வது இடத்தில் இருக்கிறது. அங்கு பணவீக்கத்தின் அளவு 36 சதவிகிதம். இந்தியாவில் இது 3.16 சதவிகிதமாக இருக்கிறது. அப்படியெனில் இந்தியாவை விட 12 மடங்கு அங்கு பணவீக்கம் அதிகம்.
துருக்கியில் வாழ்க்கைச் செலவு இந்தியாவை விட சுமார் 97 சதவீதமும், வாடகை இந்தியாவை விட 200 சதவீதமும் அதிகம். இப்படியான சூழலில் இந்தியாவை பகைத்துக்கொண்டு பாகிஸ்தான் பக்கம் துருக்கி நின்றிருப்பதால் சர்வதேச அளவில் அந்நாடு தனிமைப்படுத்தப்படவும் அதிகம் வாய்ப்பு இருக்கிறது என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் கடந்த 2023-2024 ஆம் ஆண்டில், இந்தியாவிற்கும் துருக்கிக்கும் இடையே ஆண்டுக்கு ரூ.88 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகம் நடை பெற்றது. பாகிஸ்தானை துருக்கி ஆதரிக்க தொடங்கியதால் இந்த வர்த்தகம் தொடர்ந்து குறையவும் செய்திருக்கிறது. ஏனெனில் இந்தியாவிலிருந்து துருக்கிக்கு பொருட்கள் ஏற்றுமதியாவது குறைந்திருக்கிறது. இது அந்நாட்டில் செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்தியுள்ளது. மறுபுறம் துருக்கி நாணயமான லிராவின் தொடர்ச்சியான வீழ்ச்சியும் பணவீக்கத்திற்கு காரணமாக இருக்கிறது.
அதேபோல துருக்கியுடன் அன்னம் தண்ணி பழக மாட்டோம் என இந்தியாவின் வர்த்தக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. அதாவது துருக்கியிலிருந்து எந்த பொருட்களையும் நாங்கள் வாங்க மாட்டோம். இங்கிருந்து எதுவும் துருக்கிக்கு ஏற்றுமதியும் செய்ய மாட்டோம் என்று வர்த்தக கூட்டமைப்பு அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது விளம்பரங்கள் தொடங்கி திரைப்படங்கள் வரை துருக்கியில் எடுக்க கூடாது என்றும் திரைத்துறையை இந்த அமைப்பு கேட்டுக்கொண்டிருக்கிறது. மீறி எடுத்து வெளியாகும் திரைப்படங்கள் புறக்கணிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாருதி, டாடா, மஹிந்திரா கார்கள் மற்றும் அதன் உதிரி பாகங்கள், மருந்துகள், வேளாண் இரசாயனங்கள், பருத்தி ஆடைகள், கைத்தறி துணிகள், அரிசி, கோதுமை, மசாலாப் பொருட்கள், வைரங்கள், தங்க நகைகள் என இந்தியாவிலிருந்து இதற்கு முன்னர் துருக்கிக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது ஏற்றுமதி குறைந்திருக்கிறது. இது துருக்கியை கடுமையாக பதம் பார்த்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications