பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது மோதல்!
இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதலே அந்த நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் மும்முரமாக தலையிட்டு வருகிறது. பஞ்சசீர் மாகாணத்தில் வடக்கு படை போராளிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம், தாலிபான்களுடன் கை கோர்த்து தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் ஃபையஸ் ஹமீது தலைமையிலான குழு காபூல் சென்று தாலிபான்களின் தளபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆப்கான் தாலிபான்கள் வசமான பின்னர் சென்ற முதல் வெளிநாட்டுக் குழு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. தளபதிகள்தான்.

பாகிஸ்தானில் மோதல்
இந்நிலையில்தான் ஆப்கானிஸ்தான் விவகாரத்தை யார் கையாள்வது? ஆப்கானிஸ்தானை யார் கட்டுப்பாட்டில் வைப்பது? என்பது தொடர்பாக பாகிஸ்தானின் ராணுவ தளபதி ஜாவித் பாஜ்வாவுக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவர் ஃபையஸ் ஹமீதுக்கும் இடையே பகிரங்கமாக மோதல் வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. தங்களை மீறி ஐ.எஸ்.ஐ. தலைவர் ஹமீது செயல்படுவதால் அவரை பதவி நீக்க வேண்டும் என்கிறாராம் ராணுவ தளபதி பாஜ்வா.

ஐ.எஸ்.ஐ.- தாலிபான்கள் உறவு
தாலிபான்களின் அத்தனை பிரிவுகளுடனும் ஐ.எஸ்.ஐ.-க்குதான் நெருக்கமான தொடர்பு உள்ளது. குறிப்பாக தாலிபான்களிடையே கை ஓங்கி இருக்கும் ஹக்கானி பயங்கரவாதிகளிடம் ஐ.எஸ்.ஐ. நெருக்கமான உறவு வைத்திருக்கிறது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகளுடனான யுத்தத்தின் போது ஐ.எஸ்.ஐ. பாதுகாப்பில்தான் குவெட்டா, பெஷாவரில் தாலிபான்கள் பதுங்கி இருந்தனர். அதனால் அந்த உறவு இப்போதும் தொடருகிறது.

பாஜ்வா நினைப்பது என்ன?
இப்படியான தாலிபான்கள்- ஐ.எஸ்.ஐ. உறவை ஓவர் டேக் செய்ய வேண்டும் என்று ராணுவ தளபதி பாஜ்வாவின் விருப்பம். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானின் பி டீமாக தொடர்ந்து இயங்க வேண்டும் எனில் தாலிபான்கள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும் என்பதும் ராணுவ தளபதி பாஜ்வாவின் வியூகம். இதற்கும் ஹமீது முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார். இப்படி அத்தனைக்கும் இடைஞ்சலாக ஹமீது இருப்பதாலேயே அவரை நீக்கிவிட வேண்டும் என தீவிரம் காட்டுகிறாராம் பாஜ்வா.

இம்ரான்கானுக்கு அட்வைஸ்
பாகிஸ்தான் ராணுவம், ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்திருக்கும் மோதலால் அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். பிற நாடுகளை விட ஆப்கான் தாலிபான்களுடன் பாகிஸ்தான் இவ்வளவு ஆர்வமாக, நெருக்கமாக இருப்பது நிச்சயம் ஒருநாள் சர்வதேச நெருக்கடியில் அந்நாட்டை இழுத்துவிடும் எனவும் ஒருதரப்பினர் இம்ரான்கானுக்கு அறிவுறுத்தி இருக்கின்றனர். ஆகையால் தாலிபான்கள் தொடர்பாக பாகிஸ்தான் அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்றும் இம்ரான்கானுக்கு வியூக வகுப்பாளர்கள் சுட்டிகாட்டியுள்ளனராம்.












Click it and Unblock the Notifications