தாய்லாந்து ஓட்டலில் இரட்டை குண்டுவெடிப்பு: பெண் ஒருவர் பலி; 19 பேர் படுகாயம்
ஹாவ் ஹின் : தாய்லாந்து நாட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் பெண் ஒருவர் பலியானார். வெளிநாட்டினர் உள்பட 19 பேர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்து நாட்டின் ஹாவ் ஹின் பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கிச் செல்வது வழக்கம். இந்த பகுதி மன்னர் பூமிபோல் அதுல்யாதேவின் சொந்த வீடாக கருதப்படுகிறது.

இந்நிலையில் விடுதியின் பாருக்கு அருகே 50மீ தொலைவில் உள்ள பூச்செடிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென வெடித்தன. இதில் அப்பகுதியில் உணவகம் நடத்தி வரும் பெண் ஒருவர் பலியானார். மேலும் 5 வெளிநாட்டினர் உள்பட 19 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார், சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தாய்லாந்து நாட்டின் மூன்று மாகாணங்களில் அடிக்கடி சிறிய ரக குண்டுவெடிப்புகள் நிகழ்வது வழக்கமாகி வருகிறது. ஆனால் முதல் முறையாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications