மரணம் உங்கள் வாசலில் காத்திருக்கிறது.... டிவிட்டர் ஊழியர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் மிரட்டல்!
சான் பிரான்சிஸ்கோ: போராளிகளின் டிவிட்டர் அக்கவுண்டுகளை முடக்கினால் டிவிட்டரில் வேலை பார்ப்போர் படுகொலை செய்யப்படுவார்கள் என்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு எச்சரிக்கைவிடுத்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஸ் வெளியிடும் கீச்சுக்களை டிவிட்டர் முடக்கி வைக்க தொடங்கியுள்ளது. தலையை வெட்டுவது உள்ளிட்ட வன்முறை வெறியாட்டங்களை டிவிட்டரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் மற்றும் ஆதரவாளர்கள் வெளியிட்டுவருவதால் அதுபோன்ற கணக்குகள் முடக்கப்படுவதாக டிவிட்டர் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்து டிவிட்டர் ஊழியர்களை கொலை செய்யப்போவதாக மிரட்டல் டிவிட் வெளியாகியுள்ளது. @DAWLAMOON என்ற டிவிட்டர் கணக்கில் இருந்து சில மிரட்டல்கள் வெளியாகியிருந்தன.
ஸ்லீப்பர் செல்களால் டிவிட்டர் ஊழியர்கள் படுகொலை செய்யப்படுவார்கள் என்றும், டிவிட்டர் நிழலுலகில் யுத்தம் நடத்தினால் நாங்கள் நிஜ உலகில் யுத்தம் நடத்துவோம் என்றும், வாசற் கதவு அருகே மரணம் காத்திருக்கிறது என்றும் மிரட்டல்கள் வெளியிடப்பட்டன.
இதுகுறித்து அறிந்ததும், அந்த கணக்கை டிவிட்டர் முடக்கியுள்ளது. அமெரிக்காவின் சிலிக்கான் வேலி பகுதியில் டிவிட்டரின் தலைமையகம் இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications