ஜப்பானில் புல்லட் ரயிலில் தீக்குளித்த பயணி: அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்
டோக்கியோ: ஜப்பானில் புல்லட் ரயிலில் ஒருவர் தீக்குளித்ததில் 2 பேர் பலியாகியுள்ளனர், பலர் காயம் அடைந்துள்ளனர்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து இன்று காலை 11.30 மணிக்கு ஆயிரம் பயணிகளுடன் யோமியூரி ஷிம்பன் புல்லட் ரயில் ஒசாகா நகருக்கு கிளம்பியது. ரயிலில் இருந்த ஆண் ஒருவர் கழிவறைக்கு அருகே தனது உடல் மீது தீ வைத்துக் கொண்டார். இதனால் ரயிலிலும் தீப்பிடித்தது. இதையடுத்து அவசர மணி அடிக்கப்பட்டு ரயில் ஓதவாரா நகர் அருகே நிறுத்தப்பட்டது.
ரயிலை நிறுத்தியவுடன் டிரைவர் ஓடிவந்து பார்த்தபோது ஆண் ஒருவர் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவர் அருகே பெண் ஒருவர் மூச்சு திணறி இறந்து கிடந்தார். இந்த தீ விபத்தில் பயணிகள் பலர் காயம் அடைந்துள்ளனர். பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிய தகவல் உதவி மையத்தை பிரதமர் ஷின்சோ அபே அமைத்துள்ளார். புல்லட் ரயில் பயணிக்கும் டோக்கியோ-ஒசாகா சாலை மிகவும் பாதுகாப்பானது ஆகும். அந்த வழித்தடத்தில் கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் யாரும் விபத்தில் பலியானது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 50 ஆண்டுகளில் டோக்கியோ-ஒசாகா வழித்தடத்தில் 5.6 பில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.