இந்தோனேஷியாவில் மீண்டும் 2 முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம்... பீதியில் வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!
இந்தோனேஷியாவின் சும்பா தீவில் இன்று காலை மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் சும்பா தீவில் இன்று காலை மீண்டும் இரண்டு முறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
இந்தோனேஷியாவின் சும்பா தீவில் ஏழரை லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சும்பா தீவில் இன்று அதிகாலை மீண்டும் இரண்டு முறை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
முதலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவில் 5.9-ஆக பதிவானது. இதனால் வீடுகள் மற்றும் கட்டடங்கள் குலுங்கின. வீட்டில் இருந்த பொருட்கள் எல்லாம் உருண்டன.
இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து அடுத்த 15 நிமிடங்களில் மீண்டும் அதே பகுதியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை.
இந்தோனேஷியாவில் கடந்த 28ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி ஏற்பட்டது. இதன் காரணமாக கடலையொட்டி அமைந்திருந்த குடியிருப்புகள் பலத்த சேதமடைந்தன. சுனாமி தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.