பாகிஸ்தானில் மாயமான இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டு விடுவிப்பு
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் மாயமானதாக கூறப்பட்ட இந்திய தூதரக அதிகாரிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்லாமாபாத்திலுள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டு அதிகாரிகள் இன்று காலை முதல் திடீரென மாயமாகியது பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் சாலை விபத்தை ஏற்படுத்தியதாக இருவரும் கைது செய்யப்பட்டதாக பாகிஸ்தான் மீடியாக்களில் செய்தி வெளியாகியுள்ளது.
முன்னதாக அதிகாரிகள் மாயமான சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு இந்திய தரப்பு தகவல் தெரிவித்தது. மேலும் அவர்களை கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தது. அதே நேரம் இந்த அதிகாரிகளின் பதவிகள் மற்றும் பெயர்கள் குறித்த விபரத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிடவில்லை
இந்திய தூதரை 'சேஸ்' செய்து அட்டகாசம் செய்த பாகிஸ்தான் உளவு அமைப்பு.. வெளியான பரபர வீடியோ
காலை முதல் மாயம்
இன்று காலை முதல் அந்த அதிகாரிகள் தொடர்பில் இல்லை, அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. காலை பணிக்குச் செல்ல வேண்டியவர்கள், அலுவலகம் செல்லவில்லையாம்.
டெல்லியில் பாகிஸ்தான் உளவு
சமீபத்தில் டெல்லியில் பணியாற்றக்கூடிய பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளான அபித் ஹூசைன் மற்றும் முகமது தாஹிர் கான் ஆகிய, 2 பேர் இந்திய ராணுவத்தின் நடவடிக்கைகளை உளவு பார்த்த குற்றச்சாட்டில் காவல்துறையின் வழக்குப் பதிவுக்கு உள்ளாகினர். அவர்களை கைது செய்தனர் போலீசார். இதையடுத்து, பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட்டனர். ஆனால், இதற்கு பாகிஸ்தான் கண்டனம் தெரிவித்திருந்தது.
பாகிஸ்தான் உளவு அமைப்பு
இதன்பிறகு இஸ்லாமாபாத் நகரில் உள்ள இந்திய துணை தூதர் அலுவாலியாவை, ஐஎஸ்ஐ உளவாளி ஒருவர் பைக்கில் பின்தொடர்ந்து சென்றதும், அந்த வீடியோ வெளியாகியதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பாகிஸ்தான் அதிகாரிகள் உளவு பார்ப்பதாக இந்தியா குற்றம்சாட்டியதால், அதை கிண்டல் செய்யும் விதமாக இவ்வாறு இந்திய அதிகாரியின் கார் பின்னால் பாகிஸ்தான் உளவு அமைப்பை சேர்ந்தவர்கள் பின் தொடர்ந்து சென்றதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இரண்டு அதிகாரிகள் திடீரென மாயமாகியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பழிக்கு பழி
பழிக்கு பழி வாங்குவதற்காக, இந்திய அதிகாரிகள் இருவரையும், உளவு பார்ப்பதாக குற்றம்சாட்டி, இந்தியாவுக்கு நாடு கடத்த பாகிஸ்தான் திட்டமிட்டிருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுபோல தகவல் வெளியான நிலையில்தான், பாகிஸ்தான் மீடியாக்களில் ஒரு செய்தி வெளியானது. இஸ்லாமாபாத்தில் இந்த இரு அதிகாரிகளும் பயணித்த வாகனம் சாலையை கடந்து சென்றவர்கள் மீது மோதியதாகவும், இவர்கள் நிறுத்தாமல் சென்றதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருவருமே கைது செய்யப்பட்டுள்ளனராம். இவ்வாறு அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு அதிகாரிகள் விடுதலை
இதனிடையெ இரு இந்திய அதிகாரிகளும் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இருவரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.