20 ஆண்டுகளுக்குப் பின் வியட்நாமை சூறையாடிய பயங்கர புயல்- லட்சக்கணக்கானோர் பாதிப்பு- 35 பேர் பலி!
ஹனோய்: 20 ஆண்டுகளுக்குப் பின்னர் மோலேவ் புயல் வியட்நாமை பயங்கரமாக சூறையாடி இருக்கிறது. இந்த புயலால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 35 பேர் இந்த புயலின் கோரத்தாண்டவத்துக்கு பலியாகி உள்ளனர். பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் பெரும் எண்ணிக்கையிலானோர் காணாமல் போயிருக்கின்றனர்.
வியட்நாமை மோலேவ் புயல் மிக மோசமாக தாக்கியது. இடைவிடாது கொட்டிய கனமழையால் பல பகுதிகள் வெள்ளக்காடாகி இருக்கின்றன. அதேநேரத்தில் பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டிருக்கின்றன.

இதுவரை 40,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் லட்சக்கணக்கானோர் மிக மோசமாக பாதிக்கப்பட்டும் இருக்கின்றனர். இதுவரை மொத்தம் 35 பேர் புயல் மழைக்கு பலியாகியுள்ளனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட Quang Nam மாகாணமும் தற்போதைய நிலச்சரிவில் சிக்கியுள்ளது. முன்னதாக, இந்த வெள்ளத்தில் அம்மாகாணத்தை சேர்ந்த 136 பேர் உயிரிழந்திருந்தனர்.
இந்த சூறாவளியினால் 56,000 வீட்டுக் கூரைகள் சேதமடைந்திருக்கிறது. அத்துடன், Quang Ngai மாகாணத்தில் உள்ள 17 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கையை இச்சூறாவளி பாதித்திருக்கிறது. Quang Nam மாகாணமும் இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

2008 முதல் 2018 வரையிலான காலக்கட்டத்தில், பேரிடர்கள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட 80 சதவீத இடம்பெயர்வு ஆசிய- பசிபிக் பகுதியிலேயே நடந்திருப்பதாக சமீபத்தில சர்வதேச அகதிகள் சட்டத்திற்கான Kaldor மையம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், ஆசிய- பசிபிக் நாடுகளில் ஒன்றான வியாட்நாமில் இப்புயல் பெரும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.












Click it and Unblock the Notifications