அமெரிக்க நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி ஆதிக்கம்: இந்திய உறவில் மாற்றம் ஏற்படுமா?
வாஷிங்டன்: அமெரிக்காவில், நேற்று முன்தினம் இடைத்தேர்தல்கள் நடைபெற்றது. அதிக அதிகாரம்மிக்க, பிரதிநிதிகள் சபையின், 435 இடங்களுக்கும், 100 இடங்களை கொண்ட செனட் சபைக்கும், இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை, மூன்றில் ஒரு பங்கு எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான, 36 இடங்களுக்கும், மொத்தமுள்ள, 50 மாகாணங்களில், 36 மாகாணங்களுக்கும், மாநகராட்சி, மாநகராட்சி உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடைபெற்றது.
ஓட்டுப்பதிவு மாலையில் முடிவடைந்ததும், ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன் முடிவுகள், அவ்வப்போது அறிவிக்கப்பட்டன. அதன் படி, லேட்டஸ்ட் நிலவரப்படி, நாடாளுமன்ற இரு சபைகளையும், எதிர்க்கட்சியான, குடியரசு கட்சி கைப்பற்றியது. நூறு உறுப்பினர்களை கொண்ட செனட் சபைக்கு நடைபெற்ற தேர்தலில், அமோக வெற்றி பெற்ற குடியரசு கட்சியினர், 52 இடங்களை கைப்பற்றினர்; ஜனநாயக கட்சியினர், 43 இடங்களை மட்டுமே பெற்றனர்.
தேர்தலுக்கு முன், நிலைமை தலைகீழாக இருந்தது. ஆளும் ஜனநாயக கட்சியினர், 53 இடங்களிலும், குடியரசு கட்சியினர், 45 இடங்களையும் கொண்டு இருந்தனர். அது போல, 435 இடங்களைக் கொண்ட பிரதிநிதிகள் சபையில், குடியரசுகட்சியினர், 235க்கும் அதிகமான இடங்களை பெற்றனர்; ஆளும் ஜனநாயக கட்சியினர், 157க்கு சற்று அதிகமான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர்.
தேர்தலுக்கு முன், ஜனநாயக கட்சியினர், 199 இடங்களையும், குடியரசு கட்சியினர், 233 இடங்களையும் கொண்டிருந்தனர்.அந்நாட்டின் மொத்த முள்ள, 50 மாகாணங்களின் தலைமை பொறுப்பில் உள்ள கவர்னர்களுக்கான தேர்தல், 36 மாகாணங்களுக்கு நடைபெற்றது. இந்த தேர்தலிலும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி வேட்பாளர்களே அதிக இடங்களை கைப்பற்றினர். நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும், எதிர்க்கட்சியாக இருக்கும் குடியரசு கட்சியின் கை ஓங்கியுள்ளது.

ஒபாமா பாடு திண்டாட்டம்
எனவே அதிபர் ஒபாமா எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கு, நாடாளுமன்ற அனுமதி கிடைப்பது சிரமமே; அதற்காக அவர், குடியரசு கட்சியினரை அனுசரித்து தான் போக வேண்டும்; அவரின் மிச்சமிருக்கும் இரண்டாண்டு பதவி காலம், அவருக்கு சிக்கலாகவே இருக்கும்.

வெளியுறவு கொள்கைகளில் மாற்றம்?
இந்த தேர்தல் முடிவுகளை, குடியரசு கட்சியின் கூட்டாட்சியை அமெரிக்காவில் ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறிவிடலாம். எனவே குடியரசு கட்சியின் கொள்கைகள்தான் அமெரிக்க அரசாங்கத்தின் முடிவுகளில் இனி எதிரொலிக்கப்போகிறது. இதனால் அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. ஒபாமாவின் வெளியுறவுக்கொள்கைக்கு அந்த நாட்டு மக்களில் அதிகம் பேர் அதிருப்தி தெரிவிப்பதால், அக்கொள்கையில் முக்கிய மாற்றம் வர வாய்ப்பு அதிகம். வெளியுறவுக்கொள்கையை வகுப்பதில் செனட் முக்கிய பங்காற்றும் நிலையில், குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டில் செனட் சபை வந்துள்ளதால், வெளிநாடுகளில் தாக்குதல் நடத்துவது போன்ற முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்க குடியரசு கட்சி தயவு ஒபாமாவுக்கு தேவை.

சீனா
குடியரசு கட்சியினருக்கு சீனா மீது நல்ல அபிப்ராயம் கிடையாது. அதே நேரம், வளர்ந்து வரும் சீன பொருளாதாரம், அதன் சந்தையை அமெரிக்கா பயன்படுத்துவதிலும், குடியரசு கட்சிக்கு ஆட்சேபனை இல்லை. எனவே, சீனாவுக்கு எதிரான வலுவான நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்காது என்றே தெரிகிறது

ஜப்பான்
ஒபாமா கட்சியினரை போலவே, குடியரசு கட்சியினரும் ஜப்பான் மீது நல்ல மதிப்பு வைத்துள்ளனர். எனவே ஜப்பானுடனான அமெரிக்காவின் உறவில் எந்த மாற்றமும் இருக்காது என்று நம்பலாம்.

ரஷ்யா & உக்ரைன்
ஐரோப்பாவிலுள்ள நட்பு நாடுகள் அளிக்கும் நெருக்கடியால் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா மேலும் வலுவான நிலைப்பாட்டை எடுக்கும் என்று கூறப்படுகிறது.

இஸ்ரேல்
இஸ்ரேலுடனான அமெரிக்க உறவு சமீப காலமாக சீர்கெட்டு வருகிறது. வெள்ளை மாளிகை அதிகாரிகள், இஸ்ரேலை அவமதித்ததாக சமீபத்தில் ஒரு சர்ச்சை வெடித்தது. ஆனால் குடியரசு கட்சியின் தயவால் இஸ்ரேலுடனான அமெரிக்க உறவு மேம்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு யூத அமைப்புகள் மிகவும் மெனக்கெடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகள்
மேற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகளில் இஸ்லாமிய பெயரிலான தீவிரவாதம் சமீப காலமாக அதிகரித்துள்ளதையும், அதை ஒபாமா ஒடுக்க தவறிவிட்டதையும் குடியரசு கட்சியினர் விமர்சனம் செய்து வந்தனர். இனிமேல் இந்த நிலை மாறி பிடி இறுகக்கூடும்.

இந்தியா
இந்தியாவுடனான அமெரிக்காவின் வெளியுறவுக்கொள்கைகளில் பெரிய மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. ஏனெனில் மோடியின் அமெரிக்க பயணம் இரு நாடுகளுக்கிடையே இருந்த இறுக்கமான சூழ்நிலையை தளர்த்தியுள்ளது. எச்1பி விசா உள்ளிட்ட சில பிரச்சினைகள் முன்பைப்போலவே தொடர வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications