ஓடும் ரயிலில் துப்பாக்கிச் சூடு- துணிச்சலுடன் பயங்கரவாதியை மடக்கிய அமெரிக்க ராணுவ வீரர்கள்!
பாரீஸ்: பெல்ஜியம் அருகே ஓடும் ரயிலில் மொராக்கோ நாட்டைச் சேர்ந்த ஆயுததாரி நடத்த முயன்ற பயங்கரவாத தாக்குதலை அமெரிக்காவின் ராணுவ வீரர்கள் இருவர் துணிகரமாக முறியடித்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் உலக நாடுகளை பெரும் பீதிக்குள்ளாக்கியுள்ளது,
அமெரிக்கா ராணுவ வீரர்களான ஸ்பென்சர் ஸ்டோன், அலெக் ஸ்கார்லடோஸ் ஆகியோர் விடுமுறையில் ஆப்கானிஸ்தான் சுற்றுலாவை முடித்துவிட்டு ஐரோப்பாவுக்கு வந்திருந்தனர். அவர்கள் ஆம்ஸ்டர்டாமிலிருந்து பாரிஸ் நகரத்துக்கு சென்ற விரைவு ரயிலில் பயணம் மேற்கொண்டனர்.

அந்த ரயில் பெல்ஜியம் வழியாக சென்று கொண்டிருந்த போது ரயில் பெட்டியின் கழிவறையை விட்டு வெளியே வந்த ஒருவன் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்த தயாரானான்.
இதைப் பார்த்து திடுக்கிட்ட அமெரிக்கா வீரர் ஸ்டோன், தீவிரவாதியை நோக்கி வேகமாக ஓடி தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த விடாமல் தடுத்தார். அப்போது ஸ்டோனின் கழுத்தியால் கத்தியால் கீறினான் தீவிரவாதி.
இருப்பினும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை. அவருக்கு உதவியாக சக வீரர் ஸ்கார்லடோஸ் மற்றும் கலிபோர்னியாவை சேர்ந்த சேட்லர் ஆகியோரும் சேர்ந்து கொண்டு தீவிரவாதியை மடக்கினர். இதனால் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நடத்த முடியாமல் அந்த தீவிரவாதி வசமாக சிக்கிக் கொண்டான்.
அவனை மடக்கிப் பிடித்து கைகளை கட்டிப் போட்டு போலீசிடம் மூவரும் ஒப்படைத்தனர். இந்த மூவரின் துணிச்சலால் மிகப் பெரிய பயங்கரவாத தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளது. தீவிரவாதியை மடக்கிய மூவருக்குமே படுகாயம் ஏற்பட்டது.
பிடிபட்ட 26 வயது மொராக்கோ நாட்டு தீவிரவாதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அமெரிக்கா வீரர்களின் இந்த துணிச்சல் மிக்க நடவடிக்கையை அந்நாட்டு அதிபர் ஒபாமா பாராட்டியுள்ளார்.
இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று பெல்ஜிய பிரதமர் சார்லஸ் மைக்கேல் கூறியுள்ளார். ஓடும் ரயிலில் பயங்கரவாத தாக்குதலை நடத்த முயன்ற சம்பவம் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications