ஏமனில் மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கிய அமீரக போர் விமானம்: 2 விமானிகள் பலி
சனா: ஏமனில் போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையில் பல நாடுகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமீரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் அமீரகத்தை (UAE) சேர்ந்த 2 விமானிகள் பலியாகினர்.
ஏமனில் ஈரான் ஆதரவுடன் செயல்படும் போராளிகளுக்கு எதிராக சவுதி தலைமையிலான நாடுகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதலில் அமீரக போர் விமானங்களும் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அமீரகத்தை சேர்ந்த போர் விமானம் ஒன்று திங்கட்கிழமை அதிகாலை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் அமீரகத்தை சேர்ந்த 2 விமானிகள் பலியாகினர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் போராளிகளுக்கு எதிராக தாக்குதல் நடந்து வருகையில் முதன் முதலாக அமீரக போர் விமானம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
போர் விமானம் ஏடன் நகரில் உள்ள மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏமனில் ஏடன் உள்ளிட்ட நகரங்களில் போராளிகள் மற்றும் அரசு படைகளுக்கு இடையே நடக்கும் போரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வருகிறது அல் கொய்தா மற்றும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகள்.
நேற்று அதிகாலையில் ஏடனில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் கமாண்டரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதில் அவரின் 18 வயது மகன் பலியானார். அதன் பிறகே போர் விமானம் விபத்துக்குள்ளானது. மேலும் ஏடனில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகளுக்கு எதிராகவும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.
மன்சுரா மாவட்டத்தில் பயங்கர ஆயுதங்கள் வைத்துள்ள 300 அல் கொய்தா தீவிரவாதிகள் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து இதுவரை 3 போர் விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
முன்னதாக கடந்த டிசம்பர் மாதம் பஹ்ரைனை சேர்ந்த எப்-16 விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சவுதியில் விபத்துக்குள்ளானது. நல்ல வேளையாக விமானி உயிர் பிழைத்தார். பின்னர் கடந்த மே மாதம் மொராக்கோவை சேர்ந்த போர் விமானம் ஏமனில் விபத்துக்குள்ளானது. இதில் விமானி பலியானார்.












Click it and Unblock the Notifications