துருக்கி அழகி + 1 பில்லியன் டாலர் வரதட்சணை! உகாண்டா ராணுவ தளபதி வைத்த டிமாண்டை பாருங்க
கம்பாலா: உகாண்டா ராணுவத் தளபதி முஹூசி கைனெருகபா, துருக்கி மற்றும் இஸ்ரேல் குறித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ள கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.
துருக்கி தனக்கு, அவர்கள் நாட்டின் உலக அழகியை திருமணம் செய்துக்கொள்ள கொடுக்க வேண்டும் என்றும், இது தவிர சுமார் 1 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.93 ஆயிரம் கோடி) கொடுக்க வேண்டும் என்றும் கேட்டிருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கைனெருகபா, துருக்கி உகாண்டாவிற்கு 1 பில்லியன் டாலர் பணத்தை உடனடியாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு இணங்கத் தவறினால், துருக்கி தூதரகம் மூடப்படும் என்றும், இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகள் முழுமையாகத் துண்டிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார். உகாண்டாவை, துருக்கி தொடர்ந்து முதுகில் குத்தியது என்றும் குற்றம் சாட்டியுள்ள அவர், துருக்கிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தன் நாட்டு மக்களை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையே உள்ள பஞ்சாயத்துக்களை முடிக்க, அமைதியைப் பாதுகாக்க, துருக்கி தனது பெண்களை உகாண்டாக்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், துருக்கியின் மிக அழகான பெண்ணை தனக்கு மனைவியாக்க வேண்டும் என்றும் கைனெருகபா கூறியிருக்கிறார். துருக்கியால் உகாண்டாவை ராணுவ ரீதியில் சண்டையிட்டு வீழ்த்த முடியாது என்றும், உகாண்டா படைகள் இயேசு கிறிஸ்து மற்றும் முகமது அலி ஆகியோரால் ஈர்க்கப்பட்டவை என்றும் குறிப்பிட்டார்.
இத்துடன் நிறுத்தவில்லை, மேற்கு ஆசியாவில் நிலவி வரும் பதட்டங்கள் குறித்தும் தனது பதிவுகளில் கைனெருகபா பேசியிருக்கிறார். இஸ்ரேலுக்கு ஆதரவாக 1,00,000 உகாண்டா வீரர்களை அனுப்ப ரெடியாக இருப்பதாக கூறினார். இது புனித நிலங்களைப் பாதுகாக்கும் முயற்சி என்றும் கூறியிருக்கிறார்.
முஹூசி கைனெருகபா, உகாண்டாவின் நீண்டகால அதிபரான யோவேரி முசேவேனியின் மகன் ஆவார். அவர் உகாண்டா மக்கள் பாதுகாப்புப் படையின் தளபதியாகவும், உகாண்டாவின் தேசபக்தி லீக்கின் தலைவராகவும் உள்ளார். இவரின் சமீபத்திய கருத்துகள் சர்வதேச அளவில் விமர்சனங்களை ஏற்படுத்தி வருகின்றன.
முன்னதாக, இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனிக்கு 100 மாடுகளை சீதனமாக வழங்குவதாகவும், அவரை திருமணம் செய்துக்கொள்ளப்போவதாகவும் கூறியிருந்தார். ஒருவேளை தனது கோரிக்கை ஏற்கப்படவில்லை எனில், படையெடுப்போம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், மெலோனியின் மணப்பெண் விலை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இத்தாலிய தூதரை பகிரங்கமாக அழைப்பு விடுத்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications