செலவைக் குறைக்க ஒரே மேடையில் 3 பெண்களுடன் திருமணம்... 50 வயது தாத்தாவின் ‘பலே’ ஐடியா!
செலவைக் குறைக்கும் நோக்கத்தில் ஒரே நேரத்தில் மூன்று பெண்களைத் திருமணம் செய்துள்ளார் உகாண்டைச் சேர்ந்த நபர் ஒருவர்.
கம்பாலா: உகாண்டாவில் 50 வயது முதியவர் ஒருவர் ஒரே மேடையில் மூன்று பெண்களைத் திருமணம் செய்து உலகளவில் பிரபலமாகியுள்ளார். திருமணச் செலவைக் குறைப்பதற்காக ஒரே நேரத்தில் மூன்று பெண்களை திருமணம் செய்ததாக அவர் அளித்த விளக்கம் தான் அவர் பிரபலமாகக் காரணம்.
உகாண்டாவைச் சேர்ந்தவர் முகமது ஸெமண்டா என்ற 50 வயது முதியவர். உணவுப் பொருட்களை விற்பனை செய்து வரும் இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னரே சல்மாத் நவுலுக்(48) என்ற பெண்ணுடன் திருமணமானது. இவர்களுக்கு 5 குழந்தைகளும் உள்ளனர்.
இந்நிலையில், பலதார மணத்திற்கு தடையில்லாத அந்நாட்டில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார் ஸெமண்டா. இதற்கான மணப்பெண் தேடுதலின் போது, சல்மாவின் தங்கைகளான ஜாமியோ (27), மஸ்டுல்லா(24) இருவருமே தங்களது அக்காள் கணவரைத் திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தனர்.
இதனால் இருவரையும் திருமணம் செய்து கொள்ள ஸெமண்டா முடிவு செய்தார். தனித்தனியாக இருவரையும் திருமணம் செய்தால் செலவு அதிகம் என நினைத்த அவர் ஒரே மேடையில் இரண்டு திருமணங்களையும் நடத்த முடிவு செய்தார்.
இந்த திருமணத்தால் தனது மனைவி சோகமடைந்துவிடக் கூடாது என நினைத்த ஸெமண்டா, அதே மேடையில் தனது மனைவிக்கு சல்மாத்தையும் மீண்டும் திருமணம் செய்து கொள்ள நினைத்தார். அதன்படி, சகோதரிகள் மூவரையும் ஒரே நேரத்தில் அவர் திருமணம் செய்து கொண்டார்.
இது தொடர்பாக அந்நாட்டு ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “தனித் தனியாகத் திருமணம் செய்வதற்கு என்னிடம் வசதி இல்லை. அத்துடன் இந்த மூன்று பெண்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்ததை நினைத்துச் சிறிதும் வருந்தவில்லை. திருமணம் ஒன்றாக நடைபெற்றாலும் மூவரும் தனித் தனி வீடுகளில்தான் வசிக்கப் போகிறார்கள்.
நான் இன்னும் கடினமாக வேலை செய்து, மூன்று மனைவிகளையும் மகிழ்ச்சியாகப் பார்த்துக் கொள்வேன். நான் யாரையும் ஏமாற்றி, திருமணம் செய்துகொள்ளவில்லை. என் மனைவிக்குப் பொறாமை வந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் மீண்டும் அவரைத் திருமணம் செய்துகொண்டேன். மூவரும் சகோதரிகள் என்பதால் இங்கே போட்டி, பொறாமைக்கு வழியே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
ஸெமண்டா தற்போது திருமணம் செய்துள்ள ஜாமியோ, மஸ்டுல்லா சகோதரிகளுக்கும் ஏற்கனவே திருமணமாகி விட்டது. அவர்களுக்கும் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சகோதரிகள் மூவரும் வெள்ளை ஆடையில் கிரீடம் சூட்டிக் கொண்டு ஸெமண்டாவை இன்முகத்துடன் திருமணம் செய்து கொண்ட வீடியோ வைரலாகியுள்ளது.