பொற்கோயில் தாக்குதல்: இந்திரா ஒப்புதலோடு இந்தியாவுக்கு ஆலோசனை வழங்கினோம்- பிரிட்டன்
கடந்த 1984ஆம் ஆண்டு நடந்த பொற்கோயில் தாக்குதல் சம்பவமான ஆபரேஷன் புளூ ஸ்டார் தாக்குதலில் பிரிட்டனுக்கு தொடர்புள்ளதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது. அதன் தொடர்ச்சியாக உண்மைத் தகவல்களை வெளியிடும் படி, பிரிட்டன் நாட்டின் சீக்கிய நாடாளுமன்ற உறுப்பினர், அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் வலியுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காலிஸ்தான் பிரிவினைவாத தீவிரவாதிகளை பொற்கோயிலில் இருந்து வெளியேற்றுவது குறித்து அந்நாட்டு அரசிடம் ஆலோசனை வழங்குமாறு இந்தியா கேட்டுக்கொண்டதாகவும், அக்கடிதத்திற்கு அப்போதைய பிரதமர் மார்கரெட் தாட்சர் ஒப்புதல் கொடுத்ததாகவும் நேற்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை செயலாளர் வில்லியம் ஹேக் தெரிவித்தார்.
மேலும், ஒப்புதலைத் தொடர்ந்து சிறப்பு படை அதிகாரி ஒருவர் அந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் 8ந் தேதிக்கும் 19ந் தேதிக்கும் இடையே இந்தியாவிற்கு வந்ததாகவும், அவர் இந்திய ராணுவம் வரைவு செய்திருந்த தாக்குதல் திட்டத்தில் சில ஆலோசனை வழங்கியதாகவும், பின்னர் பிரதமர் இந்திராவின் ஒப்புதலுக்குப் பின் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த ஆலோசனையின்போது பொற்கோவில் தாக்குதலில் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தும்படி இந்திய அரசுக்கு இங்கிலாந்து ஆலோசனை வழங்கியதாகவும் ஹேக் தெரிவித்துள்ளார்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அந்நாட்டு மூத்த அரசு ஊழியருக்கு பிரதமர் டேவிட் கேமரூன் உத்தரவிட்டதை தொடர்ந்து, இந்த அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.