ரஷ்யாவின் யுத்தம்: கேள்விக்குறியாக இலங்கை ஏற்றுமதி மட்டுமல்ல..இந்திய வம்சாவளி தமிழரின் எதிர்காலமும்!
கண்டி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தால் இலங்கை பொருளாதார ரீதியாக மேலும் கடும் நெருக்கடியை எதிர்கொள்ளும் அபாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என்பதால் இந்திய வம்சாவளி தமிழரின் எதிர்காலமும் மிகப் பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.
இலங்கை முன் எப்போதும் இல்லாத வகையில் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. சர்வதேச பொருளாதார அமைப்புகளிடம் பெற்ற கடன் ஒருபக்கம், சீனாவிடம் குறுகிய கால கடனாக பெற்றதை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம், கொரோனா கால பாதிப்புகள் என மொத்தமாக இலங்கையை நிர்மூலமாக்கி இருக்கிறது.

கை கொடுக்கும் இந்தியா
இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிக மிக கடுமையாக உயர்ந்துள்ளன. இத்தகைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு இந்தியா கடனுதவிகளை வழங்கி கொண்டிருக்கிறது. மேலும் இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

ரஷ்யாவின் யுத்தம்
இந்த நிலையில் உக்ரைன் மீது ரஷ்யா திடீரென யுத்தம் தொடங்கி இருக்கிறது. உக்ரைனில் உள்ள ரஷ்ய தேசிய இனத்தவருக்கு ஆதரவாக இந்த யுத்தத்தை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இதனையடுத்து ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன. யுத்தத்தில் சிக்கியிருக்கும் ரஷ்யாவும் உக்ரைனும் இலங்கையின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இலங்கை ஏற்றுமதி
இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி தேயிலை. 2-வது இலங்கைக்கான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை. இலங்கை அதிகமாக தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ரஷ்யா 3-வது இடத்தில் இருக்கிறது. ஒரு ஆண்டுக்கு சராசரியாக 29 மில்லியன் கிலோ தேயிலையை ரஷ்யாவுக்கு இலங்கை ஏற்றுமதி செய்கிறது. இந்த வரிசையில் உக்ரைன் 18-வது இடத்தில் இருக்கிறது. இப்போது இருநாடுகளும் யுத்தத்தில் மூழ்கியதால் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி கடும் நெருக்கடிக்குள்ளாகி இருக்கிறது.
Recommended Video

இந்திய வம்சாவளி தமிழர்கள்
ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ததற்கான தொகையை இலங்கை பெறுவதற்கு நீண்டகாலம் ஆகலாம் எனவும் கூறப்படுகிறது. இதனால் இலங்கை தேயிலை தோட்டங்களை மட்டுமே நம்பி பல லட்சக்கணக்கில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி தமிழர்களின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. இது தொடர்பாக இலங்கை அரசு என்ன நடவடிக்கை எடுக்கும்? இந்த விவகாரத்தில் இந்தியாவின் உதவியை இலங்கை கேட்க முடியுமா? என்பதும் தெரியவில்லை என்கின்றனர் இந்திய வம்சாவளி தமிழ் தலைவர்கள்.












Click it and Unblock the Notifications