"அவங்களுக்கு தைரியமும் இல்லை.. உதவ துணிச்சலும் இல்லை!" யாரை சொல்கிறார் ஜெலன்ஸ்கி! பரபர பின்னணி
கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உக்ரைன் நாட்டில் கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர் ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் பெரியளவில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனால் உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் 32ஆவது நாளாக இன்றும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்கிறது.

உக்ரைன்
இந்தப் போரால் தற்போது வரை பெரிதும் பாதிக்கப்பட்டது என்னவோ உக்ரைன் தான். போர் தொடங்கும் முன்பு வரை, அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள் உக்ரைனுக்குப் பக்க பலமாக இருக்கும் என்ற வகையில் பேசி வந்தன. இருப்பினும், போர் தொடங்கிய பின்னர் நேட்டோ நாடுகளின் நிலைப்பாட்டில் மாற்றம் தெரிந்தன. ரஷ்யா உடன் நேரடியாகப் போரில் ஈடுபடமாட்டோம் என்ற முடிவை நேட்டோ நாடுகள் எடுத்துள்ளன. அதேநேரம் ரஷ்யாவை எதிர்கொள்ளத் தடுப்பு ஆயுதங்களை உக்ரைன் நாட்டிற்கு உலக நாடுகள் வழங்கி வருகின்றன.

அதிபர் ஜெலன்ஸ்கி தாக்கு
இதனிடையே ரஷ்யாவின் இந்த போரில் உக்ரைன் நாட்டிற்காக உதவும் தைரியமும் துணிச்சலும் மேற்குலக நாடுகளுக்கு இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விளாசித் தள்ளியுள்ளார். ரஷ்யா ராணுவத்தைச் சமாளிக்கப் போர் விமானங்கள் மற்றும் டாங்கிகள் தேவை என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார். நேட்டோ உள்ளிட்ட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ராணுவ ஜெட்கள், டாங்கிகளில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தை அளித்தால் கூட அது உக்ரைன் நாட்டிற்கு பேருதவியாக இருக்கும் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

உதவி தேவை
முன்னதாக நேற்று போலந்து சென்ற அமெரிக்க அதிபர் பைடன் ரஷ்யாவைக் கடுமையாகச் சாடி பேசினார். குறிப்பாக புதினின் இனியும் அதிபர் பதவியில் தொடரக் கூடாது என்று விமர்சித்து இருந்தார். பைடனின் இந்த வார்த்தைகள் சர்வதேச அளவில் பெரிய சர்ச்சையைக் கிளப்பிய நிலையில், வெள்ளை மாளிகை உடனடியாக இது குறித்து விளக்கம் அளித்திருந்தது. இந்த நிகழ்வையும் சாடிய ஜெலன்ஸ்கி, குற்றஞ்சாட்டுவது, விமர்சிப்பது என மாறி மாறி இருக்காமல் உலக நாடுகள் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும் எனச் சாடியுள்ளார்.

புதிய வீடியோ
இது தொடர்பாக இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோவில், "நான் இன்று மரியுபோல் நகரின் அதிகாரிகள் உடன் பேசினேன். நான் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். அவர்களின் உறுதியும், வீரமும், உறுதியும் வியக்க வைக்கிறது. மரியுபோல் நகரைக் குறி வைத்து ரஷ்யா தீவிரமாகத் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், மரியுபோல் மோசமான இழப்புகள் மற்றும் பாதிப்புகளைச் சந்தித்ததுள்ளது

துணிச்சல் இல்லை
போர் தொடங்கி 31 நாட்கள் கடந்துள்ளன. நேட்டோ உள்ளிட்ட உலக நாடுகள் தங்களிடம் இருக்கும் ராணுவ ஜெட்கள், டாங்கிகளில் குறைந்தபட்சம் 1 சதவீதத்தை அளித்தால் கூட அது உக்ரைன் நாட்டிற்கு பேருதவியாக இருக்கும். ஆனால், அதற்குக் கூட மேற்குல நாடுகளுக்குத் தைரியமும் துணிச்சலும் இல்லை என்பதே உண்மை" என்று பேசியுள்ளார். போர் தொடங்கியது முதலே நேட்டோ நாடுகளின் நிலைப்பாட்டை அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து விமர்சித்துப் பேசி வருகிறார். இருந்தாலும் கூட அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் போரில் இருந்து ஒதுங்கி நிற்கவே விரும்புகின்றன.












Click it and Unblock the Notifications