உக்ரைன் உடன் அமைதிப்பேச்சுவார்த்தை... தாக்குதல் வேகத்தை குறைத்த ரஷ்யா
கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு பெலாரஸில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதையொட்டி உக்ரைனில் தாக்குதல் வேகத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்நாட்டு எல்லையில் ராணுவத்தை குவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
தொடர்ந்து 5ஆவது நாளாக ரஷ்யா மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனில் பெரும்பாலான பகுதிகளில் கடுங்குளிர் நிலவுவதால் மக்கள் தவிக்கிறார்கள்.

கடும் குளிர்
உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீட்டில் இருக்கவும் முடியாமல் குளிரில் வெளியேறவும் முடியாமல் வேதனையில் உள்ளார்கள். இந்த போரால் இதுவரை 3.68 லட்சம் பேர் உக்ரைனிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சமடைந்துள்ளார்கள் என ஐநா தெரிவித்துள்ளது. இந்த போரால் ஆண்கள் உக்ரைனை விட்டு வெளியேற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் ஆயுதங்கள்
போர் தொடங்கிய இரண்டாவது நாளே உக்ரைன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் ஏற்படும் என ரஷ்யா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது. எனினும் உக்ரைன் சரணடைய மறுத்து தொடர்ந்து போரிட்டு வந்தது. ரஷ்யாவுக்கு உரிய பதிலடியையும் கொடுத்து வந்தது.

ரஷ்ய ராணுவம்
இந்த நிலையில் நேற்று முன் தினம் ரஷ்யா தனது ராணுவத்திற்கு முக்கிய ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி உக்ரைன் நாட்டை எல்லா திசைகளிலும் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்த வேண்டும் என ராணுவத்திற்கு ரஷ்யா உத்தரவிட்டுள்ளது. இதனால் போர் மேலும் தீவிரமடைந்தது. உக்ரைனின் முக்கிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது.

கடும் சேதம்
பெரும்பாலான இடங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்துவது இனப்படுகொலை என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சர்வதேச நீதிமன்றத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த வாரம் தொடங்கும் என தெரிகிறது.

பொருளாதார தடை
இந்த நிலையில் பொருளாதார தடை, உலக நாடுகள் கண்டனம், ஐநா கண்டனம் என தொடர் அழுத்தங்களால் பெலாரஸ் நாட்டில் உக்ரைனுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார் என அறிவித்தது. உக்ரைன் மீது போர் தொடுக்க பெலாரஸ் நாடு ரஷ்ய படைகளுக்கு அனுமதி கொடுத்ததால் அந்த இடத்தில் பேச்சுவார்த்தைக்கு வர முடியாது என உக்ரைன் மறுத்தது.

பெலாரஸில் பேச்சுவார்த்தை
பெலாரஸுக்கு பதிலாக புட்டாபெஸ்ட், இஸ்தான்புல் உள்ளிட்ட அண்டை நாட்டின் தலைநகரங்களில் பேச்சுவார்த்தை நடத்தினால் உக்ரைன் தயார் என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருந்தார். இதற்கு ரஷ்யா ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து பெலாரஸில் வைத்து இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக் கொண்டுள்ளது. அதன் படி இன்று அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு உக்ரைன் கிளர்ச்சியாளர்களால் 2400 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதனால் இரு நாடுகளுக்கிடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து 2015 ஆம் ஆண்டு உக்ரைன்- ரஷ்யா இடையே ஏற்பட்டமோதலால் மீண்டும் ஒரு ஒப்பந்தம் மின்ஸ்கில் கையெழுத்தாகியது. அதை உக்ரைன் அரசு செயல்படுத்தவில்லை. இதனால் இன்றைய பேச்சுவார்த்தையில் இந்த இரு ஒப்பந்தங்களையும் அமல்படுத்துமாறு உக்ரைனுக்கு ரஷ்யா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

எச்சரிக்கை மணி நிறுத்தம்
தாக்குதலை குறைத்துக் கொண்ட ரஷ்யா, உக்ரைன் தலைநகர் கீவ் நகரிலிருந்து மக்கள் சுதந்திரமாக வெளியேற அறிவித்துள்ளது. உக்ரைனில் போர் தாக்குதலுக்கான எச்சரிகை ஒலி நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை வாங்குவதற்காக கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் சுமூகம் ஏற்பட்டு போர் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என்பதுதான் அனைவரின் கோரிக்கையாக உள்ளது.












Click it and Unblock the Notifications