கைது செய்யப்பட வேண்டிய நெதன்யாகுவுக்கு.. பாதுகாப்பு ஏன்? ஐநா செயற்பாட்டாளர் கேள்வி!
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போருக்காக நெதன்யாகு கைது செய்யப்பட வேண்டியவர் என்று சர்வதேச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு கொடுத்தது. ஆனால் இந்த உத்தரவை மீறி தற்போது ஐரோப்பிய நாடுகள் நெதன்யாகுவுக்கு பாதுகாப்பு வழங்கியுள்ளன. இதற்கு எதிராக ஐ.நா செயற்பாட்டாளர் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.
பாலஸ்தீனத்தில் மனித உரிமைகள் நிலைமையைப் பற்றிய ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறப்பு நிருபர் பிரான்செஸ்கா அல்பானீஸ்தான் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலால் நியமிக்கப்பட்ட இவர், பாலஸ்தீனத்தில் நடைபெறும் மனித உரிமைகள் மீறல்களை ஆய்வு செய்து தொடர்ந்து அறிக்கையை வெளியிட்டு வருகிறார். இஸ்ரேல் நடத்தும் கொடுர தாக்குதல்களில் பொதுமக்களும், குழந்தைகளும்தான் செத்து வீழ்கிறார்கள் என்று இவர் குற்றம்சாட்டி வருகிறார். அங்கு நடந்கும் மனித உரிமை மீறல்களை, வெளி உலகத்திற்கு தெரியப்படுத்துவதில் இவர் முக்கியமான நபர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவுக்கு நெதன்யாகு சென்றிருந்தார். அவர் பயணித்த விமானம் இத்தாலி, பிரான்ஸ் மற்றும் கிரீஸ் நாடுகளை நடந்து பயணித்திருக்கிறது. இந்த நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தின் சட்டதிட்டங்களை ஏற்றுக்கொண்டிருக்கின்றன. அப்படியெனில், இந்த நீதிமன்றம் ஒருவரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தால், அந்த குற்றவாளிக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்க கூடாது. குறிப்பாக நீதிமன்றத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் நாடுகள் அதை செய்யவே கூடாது.
ஆனால், இந்த மூன்று நாடுகளும், குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நெதன்யாகுவை தங்கள் வான் பரப்பில் பயணிக்க அனுமதித்திருக்கின்றன. இதைத்தான் அல்பானீஸ் கேள்வியாக எழுப்பியுள்ளார்.
காசா மீதான இஸ்ரேலின் போரின் போது போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்ததாக நெதன்யாகு மற்றும் முன்னாள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் என இருவருக்கு கடந்த ஆண்டு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்டுகளை பிறப்பித்திருந்தது.
கைது உத்தரவும் நெதன்யாகுவும்
கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது, பாலஸ்தீன விடுதலை அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியிருந்தது. அதற்கு முன்னர் பல ஆண்டுகளாக இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் மீது நடத்திய கொடுமைகளுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் பார்க்கப்பட்டது. ஆனால், இந்த தாக்குதலை சாக்காக வைத்துக்கொண்டு பாலஸ்தீனம் எனும் நிலப்பரப்பை முழுமையாக கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டது. இந்த யோசனையிலிருந்து பிறந்ததுதான் இஸ்ரேல்-காசா போர்.
இந்த போரில் ஹமாஸ் அமைப்பினரை ஒழிப்போம் என்று இஸ்ரேல் கூறியிருந்தது. ஆனால் யதார்த்தத்தில் பாலஸ்தீன மக்கள்தான் அதிக அளவில் கொல்லப்பட்டனர். 63,000 பேர் இதுவரை கொல்லப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த போர் குற்றங்களுக்கு எதிராகத்தான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை கைது செய்ய வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவை பல நாடுகள் பின்பற்றவில்லை என்பதுதான் தற்போது விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது.












Click it and Unblock the Notifications