இலங்கையின் போர்க்குற்ற விசாரணைக்கு மேலும் 2 ஆண்டுகள் அவகாசம்! ஐ.நா அவகாசம் வழங்கியது
ஜெனிவா: போர் குற்றங்கள் குறித்து விசாரிக்க இலங்கைக்கு மேலும் 2 வருடங்கள் அவகாசம் வழங்கியுள்ளது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 34வது கூட்டத் தொடர் நடந்து வருகிறது. புதன்கிழமை இலங்கை தொடர்பான அறிக்கை ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்ட் ராட் அல் ஹுசைனால் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில் முக்கியமானதொரு விஷயத்தை இலங்கையிடம் வலியுறுத்தியிருந்தார். அது இந்த விசாரணையில் பன்னாட்டு நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் புலனாய்வாளர்களையும் அனுமதிக்க வேண்டும் என்பது.
ஆனால், அமெரிக்கா, பிரிட்டன், மொன்டெனெக்ரோ, மெசடோனியா ஆகிய நாடுகள் புதியதொரு தீர்மானத்தைத் தாக்கல் செய்தன
அந்த தீர்மானத்தில், விசாரணையை நிறைவேற்ற மேலும் இரண்டு ஆண்டுகள் அவகாசம் வேண்டும், கலப்பு விசாரணை (பன்னாட்டு நீதிபதிகள் அடங்கிய விசாரணை) என்பதற்குப் பதில் இலங்கை அரசின் சம்மதத்துடனான விசாரணையாகத்தான் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த தீர்மானத்திற்கு 40 நாடுகள் ஆதரவு தெரிவித்தன. இந்தியா கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. கானா நாடு மட்டும் எதிர்ப்பு தெரிவித்தது. எனவே விசாரணை நடத்த மேலும் 2 ஆண்டுகள் இலங்கைக்கு அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியா இந்த தீர்மானத்தை எதிர்க்க வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போன்றோர் கோரிக்கைவிடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.