இருக்குற பஞ்சாயத்துல இதெல்லாம் தேவையா? டெக்னாலஜிய இதுக்கா பயன்படுத்தனும்! ஈரான் செஞ்ச வேலையை பாருங்க
தெஹ்ரான்: பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டாயமாக்கியுள்ள ஈரான், அதை கண்காணிக்க ட்ரோன் போன்ற நவீன தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி வருவதாக ஐநா கவலை தெரிவித்திருக்கிறது.
ஏற்கெனவே ஈரானை எப்போது பழிதீர்க்கலாம் என்று அமெரிக்கா கழுகு கணக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, ஈரானின் இதுபோன்ற செயல்கள் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த 2022ம் ஆண்டு ஹிஜாப் அணியவில்லை என்று சொல்லி இளம் பெண் மீது அந்நாட்டு கலாச்சார காவலர்கள் நடத்திய தாக்குதில் அப்பெண் உயிரிழந்தார். இது உலகம் முழுவதும் பெரும் விவாதமாக வெடித்தது. இந்தியாவில் ஹிஜாப்புக்கு எதிராக சிலர் வன்முறையை முன்னெடுக்கிறார் என்று சொல்லப்பட்டு வந்த அதே நேரத்தில் ஈரானில் ஹிஜாப்புக்கு ஆதரவாக வெடித்த வன்முறை சர்வதேச அளவில் கவனம் பெற்றிருந்தது. இளம்பெண்ணின் மரணத்திற்கு பின்னர் ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்கள் வெடிக்க தொடங்கின.
இந்நிலையில் ஈரான் அரசின் நடவடிக்கைகள் குறித்து ஐநா வெளியிட்டுள்ள அறிவிப்பு விவாதங்களுக்கு வழிவகை செய்திருக்கின்றன. ஐநாவின் 'சுதந்திர சர்வதேச உண்மை கண்டறிதல் மிஷன்' (Independent International Fact-Finding Mission on the Islamic Republic of Iran) இந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.
அறிக்கையில் கூறியிருப்பதாவது, "ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவதை உறுதி செய்ய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. குறிப்பாக 'நாசர்' என்கிற மொபைல் செயலியை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வாகனங்களில் பயணித்தால், இந்த செயலி மூலம் பொது மக்கள் அந்த வாகன எண்ணை பதிவுசெய்தால், உரிமையாளருக்கு எச்சரிக்கை குறுஞ்செய்தி (SMS) அனுப்பப்படும். வாகனத்தில் பயணிப்பவர்கள் ஹிஜாப் அணியவில்லை என்பது மீண்டும் மீண்டும் உறுதி செய்யப்பட்டால் அந்த வாகனம் பறிமுதல் செய்யப்படும்.
தெஹ்ரான் அமிர்கபீர் பல்கலைக்கழகத்தில் முக அடையாளத்தை கண்டறியும் மென்பொருள் (Facial Recognition Software) நிறுவப்பட்டுள்ளது. இது பெண்கள் ஹிஜாப் அணிந்திருப்பதை உறுதி செய்கிறது. அதேபோல, முக்கிய சாலைகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள், வாகனங்களில் உள்ள பெண்கள் ஹிஜாப் அணிந்துள்ளார்களா என்பதை கண்காணிக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த தகவலின் உண்மை தன்மை குறித்து ஈரான் ஆதரவாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். இருப்பினும் ஈரானில் இப்படியான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டால் அது கவலை தரும் விஷயம்தான் என்று பெண் உரிமையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
ஏற்கெனவே ஈரான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. இந்த நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டு, எண்ணெய் வளங்களை சரியாக பயன்படுத்தி அதன் மூலம் வரும் வருவாயில் அனைத்து தரப்பு மக்களின் வளர்ச்சியையும் சாத்தியப்படுத்த வேண்டும். அதை தவிர்த்து கலாச்சார விஷயத்தில் கவனம் செலுத்துவது வளர்ச்சிக்கு உதவாது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications