இத்தாலி வீரர்கள் மீதான வழக்கு... இந்தியா விசாரிக்க உரிமை உள்ளதாக ஐ.நா. தீர்ப்பாயம் உத்தரவு
ஹம்பர்க்: மீனவர்கள் இருவரை சுட்டுக்கொன்ற வழக்கில் இரு இத்தாலி வீரர்கள் மீதான வழக்கில் ஐ.நா. தீர்ப்பாயம் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதில் இந்தியாவிற்கு சாதகமான தீர்பபு வெளியானது.
2012-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரு மீனவர்களை கொச்சி கடல் பகுதியில் என்ட்ரிகா லெக்ஸி கப்பலில் வந்த இத்தாலி வீரர்கள் சுட்டுக்கொன்றனர்.
இந்த வழக்கில் இத்தாலி மாலுமிகள் மிஸிமிலினோ ரதோர், சல்வதார் ஜிரோம் ஆகியோர் மீதான விசாரணை ஜெர்மனியின் ஹம்பர் நகரில் உள்ள ஐ.நா. சர்வதேச தீர்ப்பாயத்தில் நேற்று நடைபெற்றது. இந்தியா தரப்பில், கடல் கொள்ளையர்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரிக்க இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் உரிமையில்லை என இத்தாலி சார்பில் வாதிடப்பட்டு, குற்ற வழக்கிற்கு தடை விதிக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து தீர்ப்பளித்த நீதிபதி இத்தாலி வீரர்களுக்கு தண்டனை அளிக்க இந்தியாவிற்கு அடிப்படை உரிமை உள்ளது என்றும், இந்த வழக்கில் இந்தியாவிற்கு விசாரணை அதிகார வரையறை உள்ளதாகவும் தெரிவித்தனர்.
மீனவர்களை எச்சரிக்காமல், ஆயுதங்களை பிரயோகித்துள்ளதால், இத்தாலியின் கோரிக்கை நிராகரிக்கப்படுவதாகவும் நீதிபதி கூறினார். மேலும் இத்தாலி வீரர்கள் மீதான தண்டனை குறித்த விவரங்களை இந்தியாவே தீர்மானிக்கும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அனைத்து வழக்குகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இருநாடுகளும் தங்களது முதல் விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 24 ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.