காபூல் உணவகம் மீது தீவிரவாத தாக்குதல்: 4 ஐ.நா. அமைப்பினர் உட்பட 21 பேர் பலி
காபூல்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் உள்ள உணவகம் ஒன்றில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக பலியானார்கள். இதில் நான்கு பேர் ஐ.நா.அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் பான்-கி-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காபூலில் உள்ள லெபனான் உணவகத்தில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களே பெரும்பான்மையாக இங்கு கூடுவது வழக்கம். வெள்ளிக்கிழமை மாலையன்று தலிபான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் 21 பேர் பலியாகி உள்ளனர். நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
இறந்தவர்களில் நான்கு பேர் ஐ.நா அமைப்பினர் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மேலும் நான்கு பேர் பிற சர்வதேச அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்ற விபரமும் வெளிவந்தது. இறந்தவர்களைப் பற்றிய பிற விபரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
இந்தத் தாக்குதல் குறித்து ஐ.நா.வின் பொதுச்செயலர் பான்-கி-மூன் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளதாக ஐ.நா. அமைப்பின் துணைத் தகவல் தொடர்பாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. மேலும் இவை சர்வதேச மனிதாபிமான விதிகளை அப்பட்டமாக மீறிய ஒரு செயலாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நிதி மையமும் ஆப்கானிஸ்தானில் இருந்த தனது பிரதிநிதி ஒருவர் இந்தத் தாக்குதலில் இறந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
நேற்று நடந்த தாக்குதல் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கும், பொது மக்களுக்கும், ஆப்கன் அரசிற்கும் தங்களது வருத்தங்களைத் தெரிவித்துள்ள பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் மற்ற சர்வதேச அமைப்புகளின் இழப்பிற்கும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இந்த ஆண்டு அங்குள்ள சர்வதேசப் படைகள் முற்றிலும் திருப்பி அனுப்பப்பட்டு ஆப்கானிஸ்தானில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.நா. அமைப்பு அங்கு முக்கிய பணியாற்ற உள்ளது. ஏற்கனவே தங்களின் தளங்களில் பாதுகாப்பை அதிகரித்துள்ளதாகக் கூறும் ஐ.நா. அதிகாரிகள் நேற்று நடந்த சம்பவத்தினால் கண்காணிப்பை மேலும் அதிகரிக்க உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications