இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது
ஜெனீவா: ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா மீண்டும் தீர்மானம் கொண்டு வருகிறது. இதன் காரணமாக போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் இடையே நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டம் அடைந்தது. அப்போது மனித உரிமைகள் மீறப்பட்டன. போர்க்குற்றங்கள் அரங்கேற்றப்பட்டன. போர் இல்லாத பிரதேசங்களில் தஞ்சம் புகுந்த அப்பாவி தமிழ்மக்களையும் சிங்கள ராணுவம் விட்டு வைக்கவில்லை. அப்போது 40 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. புள்ளி விவரம் கூறுகிறது.

போர் உச்சக்கட்டம் அடைந்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதும், அப்பாவித் தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டதும் சர்வதேச நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா கடந்த 2012, 2013 ஆண்டுகளில் தீர்மானம் கொண்டு வந்தது. அந்த தீர்மானங்கள், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தின.
ஆனால் போர் முடிந்து 5 ஆண்டுகள் ஆன நிலையிலும், இன்னும் பல இடங்களில் தமிழர்கள் முள்வேலிகளுக்குள் அடைபட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வாழ்கிற நிலைதான் உள்ளது. நல்லிணக்க சூழல் ஏற்படவில்லை.இந்த நிலையில், உலக குற்ற நீதித்துறை அமைப்பில் அமெரிக்க தூதராக உள்ள ஸ்டீபன் ராப், இலங்கையில் ஒரு வார காலம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று அவர் வடக்கு மாகாணத்திற்கு சென்று போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். தமிழ் தேசிய கூட்டணி தலைவர்களையும் அவர் சந்தித்து பேசினார். இன்னும் இரண்டு நாட்கள் அவர் அங்கே தங்கி இருந்து தமிழர் தலைவர்கள், அதிகாரிகளை சந்தித்து பேச உள்ளார்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில், இலங்கை பிரச்சினையில் அமெரிக்கா தனது மூன்றாவது தீர்மானத்தை மார்ச் மாதம் தாக்கல் செய்யும் என அவர் தன்னிடம் கூறியதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மூத்த தலைவர் சுமந்திரன் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த தீர்மானம், போர்க்குற்ற நடவடிக்கைகளில் இலங்கையை பொறுப்பேற்க வைக்கவும், தமிழ் மக்களுடன் நல்லிணக்கம் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவும் சர்வதேச அளவில் நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமல்ல, போர்க்குற்றங்கள் தொடர்பாக இலங்கை மீது சர்வதேச விசாரணை நடத்த வழிவகுக்குமா என்பதும் தெரிய வரும்.
ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் அமெரிக்கா மூன்றாவது தீர்மானம் கொண்டு வர இருப்பதாக ஸ்டீபன் ராப் கூறியது குறித்து, சிங்கள அரசின் செய்தித்தொடர்பாளரும், அமைச்சருமான கேஹலிய ரம்புக்வெல்லாவிடம் கருத்து கேட்டபோது அவர், ‘நிலைமையை எதிர்கொள்ள ராஜ்ய ரீதியில் இலங்கை தயாராக உள்ளது. அமெரிக்காவின் நடவடிக்கைகள் பற்றி இலங்கை முழுமையாக அறியும். அதில் ரகசியம் எதுவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications