பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை- அமெரிக்கா கண்டனம்
மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
நியூயார்க்: பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மூத்த பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கவுரி லங்கேஷ் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டார்.
லங்கேஷ் பத்ரிகே' என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியர் கவுரி லங்கேஷ். பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய இவர் வகுப்புவாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர்.
தொடர்ந்து பாஜகவுக்கு எதிராகவும், இந்துத்துவாவை எதிர்த்தும் பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.
கடந்த ஆண்டு, பாஜக தலைவர்களுக்கு எதிராக கட்டுரை எழுதியதற்காக அவதூறு வழக்கில் கவுரி லங்கேஷ் தண்டிக்கப்பட்டார்.
தைரியமிக்க பத்திரிக்கையாளரான இவர் மதவாதத்திற்கு எதிராக தொடர்ந்து எழுதி வந்துள்ளார். கவுரி லங்கேஷ் கொல்லப்பட்டதற்கு கேரள, கர்நாடக மற்றும் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்து உள்ளது.
இந்தியாவில் பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குரலுக்கும், மதிப்பிற்குரிய பத்திரிக்கையாளார் கவுரி லங்கேஷ் கொலைக்கு உலகம் முழுவதும் எழுந்து உள்ள கண்டத்திற்கும் இந்தியாவில் உள்ள அமெரிக்க மிஷன் உடன் நிற்கிறது.
கவுரி லங்கேஷின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணிபுரிபவர்களுக்கு எங்களுடைய இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.