ரஷ்யாவுக்கு ஜாக்பாட்.. ஈரான் போருக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு டிரம்ப் கிரீன் சிக்னல்!
உலக அளவில் எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்துடனும், ஹார்முஸ் முடக்கத்திற்கு மத்தியில் உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை தொடர வேண்டும் என்பதற்காக அமெரிக்கா ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. அமெரிக்க கருவூல அமைச்சகம் தனது இணையதளத்தில் வெள்ளிக்கிழமை ஏற்கெனவே கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெயை மே 16 வரை வாங்க அனுமதிக்கிறது.
ஏப்ரல் 11ஆம் தேதி காலாவதியான 30 நாள் விலக்கு உத்தரவுக்கு பதிலாக இந்த புதிய நீட்டிப்பு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த உரிமம் ஈரான், கியூபா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய எந்த வர்த்தகமும் அனுமதிக்கப்படாது என தெரிவித்துள்ளது அமெரிக்க அரசு. இது ரஷ்யாவுக்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவின் இந்த முடிவு, உலகளாவிய எண்ணெய் விலைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக எரிபொருள் விலைகள் அதிகமாக மாறுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ரஷ்ய எண்ணெய் சந்தையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதன் மூலம், சர்வதேச சந்தையில் சப்ளை அதிகரித்து, விலை உயர்வை கட்டுப்படுத்த அமெரிக்கா இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
ஆனால் இதற்கு பின்னால் 2 முக்கிய விஷயங்கள் உள்ளதாக வல்லுனர்கள் பார்க்கின்றனர். ஒருப்பக்கம் ஈரான் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தையில் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அறிவிக்கும் வேளையில் எதற்காக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் விற்பனையை அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் ஈரான் உடனான பேச்சுவார்த்தை தாமதமாகுமா என்ற கேள்வி எழுகிறது.
2வதாக அமெரிக்கா தற்போது கப்பல்களில் ஏற்றப்பட்ட ரஷ்ய எண்ணெயை மட்டுமே உலக நாடுகள் வாங்குவதற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சரக்கு கப்பல்களை மற்ற நாடுகளுக்கு திருப்பிவிட ரஷ்ய எண்ணெய் கொண்டுள்ள கப்பல்களை காலியாக்கும் முயற்சியாகவும் இதை பார்க்கப்படுகிறது.
நேற்று ஹார்முஸ் வழித்தடத்தை தற்காலிகமாக திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, உலக எண்ணெய் விலை சுமார் 9% குறைந்து, ஒரு பேரலுக்கு 90 டாலருக்கு கீழ் சரிந்தது. இருப்பினும், International Energy Agency கூறுவதுபோல், தற்போதைய நிலை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய எரிபொருள் சப்ளை தடைகளில் ஒன்றாக உள்ளது. உலக எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தின் சுமார் 20% இந்த பாதை வழியாக நடைபெறுவதால், இப்பாதையில் ஏற்படும் சிறு பாதிப்பும் விலை உயர்வை உடனடியாக தூண்டும் விஷயமாக உள்ளது. இதை சமாளிக்கவே ரஷ்ய எண்ணெய்யை சந்தைக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சி செய்கிறது.
இந்த சூழலை பெரிய அளவில் பயன்படுத்தி வரும் இந்தியா மார்ச் மாதத்தில் மட்டும் ரஷ்யாவிலிருந்து 5.8 பில்லியன் டாலர் மதிப்பிலான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்துள்ளது இந்தியா. இது பிப்ரவரி மாதத்தை விட மூன்று மடங்கு அதிகமாகும்.
மேலும், இந்தியா ரஷ்யாவில் இருந்து சுமார் 600 மில்லியன் டாலர் மதிப்பிலான நிலக்கரி மற்றும் பிற எண்ணெய் தயாரிப்புகளும் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த முடிவு, பல நாடுகளின் அழுத்தத்தின் பின்னணியில் வந்துள்ளது. G20, உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற அமைப்புகளின் கூட்டங்களில், எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த இந்த சலுகையை நீட்டிக்க வேண்டுமென பல நாடுகள் அமெரிக்காவிடம் வலியுறுத்தியதன் அடிப்படையில் மே 16 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
சில நாட்களுக்கு முன் அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசன்ட் இந்த சலுகையை நீட்டிக்கப்படாது என்று கூறப்பட்டிருந்த நிலையில், தற்போதைய நீட்டிப்பு மிகவும் முக்கியமானதாக உள்ளது. இந்த நடவடிக்கை குறுகிய காலத்தில் எண்ணெய் விலையை கட்டுப்படுத்த உதவினாலும், நீண்டகாலத்தில் பல சிக்கல்களை உருவாக்கக்கூடும்.
குறிப்பாக, ரஷ்யாவின் வருவாயை குறைக்கும் மேற்கத்திய நாடுகளின் முயற்சிகள் இதனால் பாதிக்கப்படலாம். மேலும், அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள் இடையே கருத்து வேறுபாடுகளும் உருவாக வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ரஷ்யாவிற்கு மறைமுகமாக பொருளாதார ஆதரவு கிடைக்கும் என்ற விமர்சனமும் எழுகிறது.















Click it and Unblock the Notifications