ரசாயன தாக்குதல் எதிரொலி... சிரியா மீது அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டு வான்வழி தாக்குதல்!
சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப் போரில் மக்கள் மீது ரசாயன தாக்குதல் நடத்தப்படுவதை கண்டிக்கும் விதமாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் கூட்டுப்படைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளன.
Recommended Video
டமாஸ்கஸ் : சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் ரசாயன தாக்குதல் நடத்தப்படுவதை ரஷ்யா தடுக்கவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது. அதிபர் ட்ரம்ப் எச்சரித்தபடி சிரியா மீது அமெரிக்க கூட்டுப்படை வான்வழி தாக்குதலை தொடங்கியுள்ளது.
சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கிளர்ச்சியாளர்களை அரசு ராணுவத்தைக் கொண்டு கட்டுப்படுத்தி வருகிறது. கிளர்ச்சியாளர்களுக்கும் அரசுக்கும் நடக்கும் போராட்டத்தில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன. கிளர்ச்சியாளர்கள், தீவிரவாதிகள், ராணுவத்தினர் இடையே நடக்கும் சண்டையில் அப்பாவிப் பொதுமக்களும் பல்லாயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு சிரிய அரசு படைகள் முயன்றன. இந்நிலையில் கடந்த 7ம் தேதி கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது. இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.
சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டுகளை அரசுப் படைகள் ஹெலிகாப்டர் மூலம் வீசப்பட்டிருக்கலாம் என்று அமெரிக்க தொண்டு நிறுவனம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த விஷவாயு தாக்குதலில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது, ஆனால் உண்மை நிலவரம் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே சிரியாவில் அதிபர் அல் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷியா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில் சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுப்படை வான்வழி தாக்குதலை நடத்தும் என்று ட்ரம்ப் அறிவித்தார்.
இதற்கு ஏற்றாற் போல டமாஸ்கஸில் 6 வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் இன்று காலையில் வெடித்ததாக கூறப்படுகிறது. டமாஸ்கஸ் மேலே புகை மேகம் சூழ்ந்தது போல காட்சியளித்ததாக ராய்டர்ஸ் கூறியுள்ளது. சிரியாவின் உள்நாட்டு தொலைக்காட்சி அமெரிக்க கூட்டுப்படையின் தாக்குதலுக்கு சிரிய ராணுவத்தின் விமானப்படை பதிலடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.
சிரியாவில் அறிவியல் ஆய்வு மையம் மற்றும் பல்வேறு சிரிய ராணுவ தளங்களும் இந்த தாக்குதல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக டமாஸ்கஸின் பர்சா மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.