அமைதிப் புறா பறக்கவில்லை! அமெரிக்கா - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி.. அடுத்து என்ன! 4 ஆப்ஷன்கள்
இஸ்லாமாபாத்: அமெரிக்கா ஈரான் பாகிஸ்தானில் நடந்த அமைதி பேச்சுவார்த்தை முடிவில் அமைதி புறாக்கள் பறக்கும் என நினைத்தால்.. மீண்டும் போர் மேகங்களே உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. 21 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது ஏன்.. இந்த விவகாரத்தில் அடுத்து என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்பது தொடர்பாக நாம் விரிவாகப் பார்க்கலாம்!
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதிப் பேச்சுவார்த்தை, எந்தவித உடன்பாடும் இன்றித் தோல்வியில் முடிவடைந்தது. 21 மணி நேரத் தொடர் விவாதங்களுக்குப் பிறகு, அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான குழு இஸ்லாமாபாத்திலிருந்து கிளம்பியுள்ளது. இந்தத் தோல்வி மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் போர்ப் பதற்றத்தை எகிற வைத்துள்ளது.

நேரடி பேச்சுவார்த்தை
சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் நேரடியாகச் சந்தித்துப் பேசிய இந்த இஸ்லாமாபாத் உச்சி மாநாடு, வளைகுடா பிரச்சனைக்கு ஒரு முடிவைத் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் நம்பிக்கையில்லாத் தன்மை பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைய அமெரிக்கா தான் காரணம் என ஈரான் சொல்லும் நிலையில், ஈரான் தான் காரணம் என அமெரிக்கா சொல்கிறது. இப்படி இரு தரப்புமே மாறி மாறி குற்றஞ்சாட்டுவது நிலைமையை மோசமாகவே மாற்றுகிறது.
மாறி மாறி குற்றச்சாட்டு
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிக்க மாட்டோம் என உறுதி அளிக்க மறுக்கிறது என்றும் தங்கள் சலுகையை அமெரிக்கா ஏற்கவில்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார். மறுபுறம் அமெரிக்கா நியாயமற்ற கோரிக்கைகளை முன்வைத்தது என்றும் ஈரானின் தேசிய நலனை விட்டுக் கொடுத்து ஒருபோதும் ஒப்பந்தம் செய்ய முடியாது என ஈரான் ஊடகங்கள் சாடியுள்ளன. லெபனானில் நிரந்தர போர் நிறுத்தம் என்பதிலும் இரு தரப்பிற்கும் இடையே டீல் ஏற்படவில்லை எனத் தெரிகிறது.
4 மேட்டர்
- மீண்டும் வெடிக்கும் போர்: தற்போது அமலில் இருக்கும் தற்காலிகப் போர்நிறுத்தம் எந்த நேரத்திலும் உடையலாம். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஏற்கனவே எச்சரித்தபடி, தனது போர்க்கப்பல்களை மீண்டும் ஈரானை நோக்கித் திருப்பக்கூடும். இது வளைகுடாவில் மீண்டும் நிலைமையை மோசமாக மாற்றும்.
- பொருளாதாரப் பாதிப்பு: இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால்.. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வாய்ப்புள்ளது. இது உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் குறைக்கும். குறிப்பாகக் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜியை இந்தியா அதிகம் இறக்குமதியே செய்யும் நிலையில், அதுவும் கூட மோசமாகப் பாதிக்கப்படும்!
- சீனாவின் தலையீடு: இதற்கு நடுவே ஈரானுக்குச் சீனா வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதியாகும் முன்பே இதுபோல ஆயுதங்களை வழங்கினால் அது அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்யும்.. இது ஒரு 'உலகப் போர்' சூழலுக்கு வழிவகுக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.
- பேச்சுவார்த்தை தொடராது: தொடர்ந்து இரு நாடுகளையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வருவோம் எனப் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் தெரிவித்துள்ளார். இருப்பினும், டிரம்ப் நிர்வாகம் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு வருமா என்பது சந்தேகமே.
அடுத்து என்ன!
இப்போது ஒரு குழப்பமான சூழலே இருக்கிறது. துணை அதிபர் வான்ஸ் அமெரிக்க சென்ற பிறகு, அவர் டிரம்பிடம் பேச்சுவார்த்தை குறித்து விளக்குவார் என தெரிகிறது. அதன் பிறகு அமெரிக்கா தரப்பில் இருந்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படக்கூடும்












Click it and Unblock the Notifications