இந்தியாவில் பெரும் தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் திட்டம்! தனது நாட்டு மக்களுக்கு அமெரிக்கா வார்னிங்
வாஷிங்டன்: தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற கூடும் என்பதால், இந்தியாவில் உள்ள அமெரிக்கர்கள் ஜாக்கிரதையாக இருக்கும்படி, அமெரிக்க அரசு எச்சரிக்கை பிறப்பித்துள்ளது.
ஈராக் மற்றும் சிரியா நாடுகளில், அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் படைகள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. இதற்கு பதிலடி கொடுப்பதற்காக அமெரிக்க குடிமக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. உளவுத்துறை அறிக்கையின் அடிப்படையில், இதுகுறித்து ஒரு எச்சரிக்கை தகவலை அது வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது:

ஆசியா, வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய நாடுகளிலுள்ள அமெரிக்க மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். இந்தியாவை பொறுத்தளவில், இந்தியன் முஜாகிதீன், ஹர்கட்-உல்-ஜிகாத்-இ-இஸ்லாமி, ஜெய்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தய்பா போன்ற பயங்கரவாத இயக்கங்கள், எந்த நேரத்திலும் பெரும் தாக்குதலை நடத்தலாம்.
அமெரிக்கர்கள் தங்கும் பெரிய நட்சத்திர ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், கடற்கரைகள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களை இலக்காக வைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறலாம். எனவே அமெரிக்க மக்கள் எச்சரிக்கையாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த எச்சரிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications