ஹிட்லர் பாணியில் டிரம்ப்.. நாட்டைவிட்டு வெளியேறுமாறு அமெரிக்க மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம்
ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் டிரம்பும் உங்களுக்கு செய்யப்போகிறார் என்றுகூறி அமெரிக்காவில் உள்ள மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம் உலா வருகிறது.
வாஷிங்டன்: யூதர்களுக்கு ஹிட்லர் என்ன செய்தாரோ அதனையே அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டொனால்டு ட்ரம்ப்பும் செய்வார் என்றுகூறி நாட்டை விட்டு வெளியேறுமாறு அங்குள்ள மசூதிகளுக்கு மிரட்டல் கடிதம் உலா வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டுடிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி ட்ரம்ப் பதவி ஏற்க உள்ள நிலையில், அமெரிக்காவில் உள்ள மசூதிகள் சிலவற்றிற்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது.
அதில் சாத்தானின் குழந்தை என்ற தலைப்பில் ஹிட்லர் யூதர்களுக்கு என்ன செய்தாரோ அதையேதான் டிரம்ப் உங்களுக்கு செய்யப் போகிறார். நீங்கள் உங்கள் உடைமைகளை எடுத்துக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறுங்கள். என்று எழுதப்பட்டுள்ளது.
மேலும் இந்தக் கடிதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்றும் இது ஒரு வெறுப்பு கடிதம் என்பதால் இதன் மீது விசாரணை நடத்த முடியாது என்றும் அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐ தெரிவித்துள்ளது. ஆனால், இது குறித்து டிரம்ப் அலுவலகம் தரப்பில் எந்த ஒரு கருத்தும் வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.