அமெரிக்காவில் ஐஎஸ் பாணியில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட போலீஸ் அதிகாரி மகன் கைது
வாஷிங்டன்: ஐஎஸ்ஐஎஸ் பாணியில் அமெரிக்காவில் தீவிரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட போலீஸ் அதிகாரியின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் மாநிலத்தில் உள்ள பாஸ்டன் நகரில் வசிக்கும் பிரபல போலீஸ் அதிகாரியான ராபர்ட் சிக்கோலோவின் மகன் அலெக்சாண்டர் சிக்கோலோ(23). அவர் அண்மையில் இஸ்லாத்திற்கு மாறி தனது பெயரை அபு அலி அல் அம்ரிகி என்று மாற்றி வைத்துக் கொண்டார். ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகள் பிடித்துப் போன அலெக்சாண்டர் 2013ம் ஆண்டு பாஸ்டன் நகரில் நடந்த மாரத்தான் போட்டியின்போது நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் போன்று ஒன்றை நடத்த திட்டமிட்டார்.

இதற்காக அவர் குக்கர் வாங்கியுள்ளார். குண்டு தயாரிக்க தேவைப்படும் பொருட்கள், துப்பாக்கிகளை அவர் மாறுவேடத்தில் பணிபுரியும் எப்.பி.ஐ. ஏஜெண்ட் ஒருவரிடம் கேட்டுள்ளார். இதையடுத்து அவர் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அலெக்சாண்டரின் நடவடிக்கைகள் சரியில்லை என எப்.பி.ஐ.க்கு அவரது தந்தை ராபர்ட் தான் தகவல் அளித்துள்ளார். மனநோயால் அவதிப்பட்டு வந்த அலெக்சாண்டர் முன்பு ஒரு ஆண்டு சிறையில் இருந்துள்ளார்.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து அலெக்சாண்டர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் மீது பற்று கொண்டார். அந்த தீவிரவாதிகள் போன்று பொது இடங்களில் தாக்குதல் நடத்த விரும்பியுள்ளார் அலெக்சாண்டர். மேலும் அவர் வெளிநாட்டுக்கு சென்று ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுடன் சேர்ந்து போரிட விரும்பியுள்ளார்.
இது குறித்து சிக்கோலோ குடும்பத்தார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அலெக்சாண்டரின் செயல் குறித்து அறிந்து வருத்தப்படுகிறோம். அவர் குக்கர் வாங்கினாரே தவிர வெடிகுண்டு எதுவும் தயாரிக்கத் துவங்கவில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications