88 ஆண்டுகளுக்கு பிறகு க்யூபாவில் அமெரிக்க அதிபர்: ஒபாமாவின் வரலாற்று பயணம்
ஹவனா (க்யூபா): 1928 ஆம் ஆண்டிற்கு பிறகு, முதல் தடவையாக அமெரிக்க அதிபர் பயணம் மேற்கொண்டுள்ள வரலாற்று சம்பவம், க்யூபாவில் நடந்துள்ளது.
அமெரிக்காவிலிருந்து 90 மைல் தொலைவில் உள்ள கம்யூனிஸ்ட் நாடான க்யூபா நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இரண்டாம் உலகப்போர் காலத்திலிருந்தே ஏழாம் பொருத்தமாக இருந்து வந்துள்ளது. அந்த போரில், ரஷ்யாவின் துணையோடு அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகவும் க்யூபா விளங்கியது.
தொடர்ந்து அங்கு நடந்த கம்யூனிஸ்ட் ஆட்சியில் ஃபிடல் காஸ்ரோ அமெரிக்காவுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வந்தார். சமீபகாலத்தில் க்யூபாவிலும் அதிருப்தியாளர்கள், அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போதைய அதிபர் ரவுல் காஸ்ரோவுடன் அதிபர் ஒபாமா நேசக்கரம் நீட்டியுள்ளார். சுமார் மூன்றாண்டுகளாக தொடர்ந்து வந்த பேச்சு வார்த்தைகளின் உச்ச கட்டமாக தற்போது ஒபாமாவின் க்யூபா பயணம் அமைந்துள்ளது.
க்யூபாவுடன் அமெரிக்கா விதித்திருந்த பொருளாதார தடைகளை நீக்குவதாக ஒபாமா அறிவித்துள்ளார். க்யூபாவில் அரசியல் பொருளாதார மாற்றங்கள் ஏற்பட்டால் தான் இந்த தடை நீக்கத்திற்கான பயன்கள் க்யூபா மக்களுக்கு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஒபாமாவின் பொருளாதாரத் தடை நீக்க முயற்சிகளுக்கு, இந்த தேர்தல் ஆண்டில் காங்கிரஸ் சபை தீர்மானம் நிறைவேற வாய்ப்பில்லை. அடுத்த அதிபர் தான் அதை நிறைவேற்ற வேண்டும்.
ஒபாமாவின் க்யூபா நல்லுறவு கொள்கைகளை குடியரசுக் கட்சியினர் தீவிரமாக எதிர்த்து வருகின்றனர். ஆனால் முன்னணி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் க்யூபா விவகாரத்தில் சற்று மென்மையான போக்கு கொண்டவர்.
அதிபர் தேர்தலில் ஹிலரி க்ளிண்டன் அல்லது டொனால்ட் ட்ரம்ப் யார் வென்றாலும், ஒபாமாவின் முயற்சிகள், அமெரிக்கா - க்யூபா நல்லுறவுக்கான அடுத்த கட்டத்திற்கு செல்லும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக 1928ம் ஆண்டு க்யூபா சென்ற கடைசி அமெரிக்க அதிபர் கேல்வின் கூலிட்ஜ் ஆவார். அவர் பதவியில் இருக்கும் போது போன ஒரே வெளிநாட்டு பயணம் க்யூபா மட்டும்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பதவியில் இருந்து க்யூபாவுக்கு சென்ற ஒரே அமெரிக்க அதிபரும் அவரே ஆவார்.
அமெரிக்க வரலாற்றில், பதவியில் இருக்கும் போது க்யூபாவுக்கு சென்ற இரண்டாவது அதிபர் என்ற பெருமையை ஒபாமா பெற்றுள்ளார்.
- இர தினகர்