உலகமே உற்றுநோக்கும் நிகழ்வு.. தைவான் சென்ற அமெரிக்க சபாநாயகர்! கொந்தளிக்கும் சீனா - போர் பதற்றம்
தைவான்: சீனாவின் கடும் எதிர்ப்புகளை மீறி அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு இன்று இரவு சென்றடைந்து இருக்கிறார்.
Recommended Video
கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.

முதல்கட்டமாக சிங்கப்பூருக்கு சென்ற அவர் அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். அமெரிக்க சபாநாயகரின் இந்த ஆசிய பயணத்தில் தைவானும் இடம்பெற்று இருந்தது சீனாவுக்கு கொதிப்பை ஏற்படுத்தியது. நான்சி பெலோசி தைவான் வருவதாக வெளியான தகவலை தொடர்ந்து சீன அதிபர் ஜீ ஜின்பிங் கண்டனம் தெரிவித்தார்.
"நான்சி பொலோசி தைவான் வருவதை எங்களால் அனுமதிக்க முடியாது. நெருப்புடன் விளையாடுபவர்கள் சாம்பலாகி போவது உறுதி." என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் அவர் எச்சரிக்கை விடுத்தார். ஜீ ஜின்பிங்கின் எதிர்ப்பை தொடர்ந்து நான்சி பெலோசி தைவான் செல்வாரா? அல்லது பின்வாங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு உலகம் முழுவதும் நிலவியது.
இந்த நிலையில் தனது பயணத்திலும் பின்வாங்காமல் அவர் தைவானுக்கு இன்று இரவு 8:15 மணியளவில் சென்றடைந்து இருக்கிறார். தைவான் சென்ற அவரை அந்நாட்டு அதிகாரிகள் உற்சாகமாக வரவேற்றனர். தைவான் தலைநகர் தைபே சென்றடைந்த அவருக்கு அந்நாடு ராணுவ பாதுகாப்பை அளித்து வருகிறது. நான்சி பெலோசிக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக 13 அமெரிக்க போர் விமானங்கள் ஜப்பானிலிருந்து தைவானின் தைப்பே நகருக்கு சென்றடைந்து உள்ளன.
தலைநர் தைபேவில் உள்ள கிராண்ட் ஹைத் விடுதியில் அவரை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. சீனாவின் எதிர்ப்புகளை மீறி தைவான் அரசு நான்சி பெலோசியை வரவேற்றதால் போர் பதற்றம் அதிகரித்து இருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இந்த விவகாரம் உலகளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications