கொரோனா தாக்கிய அமெரிக்கா பெண்ணுக்கு மாற்று நுரையீரல் ஆபரேசன் - இந்தியா வம்சாவளி டாக்டர் சாதனை
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தாக்கி நுரையீரல் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு மாற்று நுரையீரல் ஆபரேசன் செய்து சாதனை படைத்துள்ளார் இந்தியா வம்சாவளி டாக்டர் அங்கித் பரத்.
சிகாகோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. அமெரிக்காவில் பல லட்சம் பேரின் உயிரை குடித்துள்ளது கொரோனா வைரஸ். மருந்து கண்டுபிடிக்கப்படாத இந்த கொடிய அரக்கனை எதிர்த்து உலகமே போராடி வரும் இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் கொரோனா பாதித்த இளம் பெண்ணுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்துள்ளார் இந்தியா வம்சாவளி டாக்டர்.
இளம்பெண்ணிற்கு மாற்று நுரையீரல்களை பொருத்தி உயிரைக் காப்பாற்றி வாழ்வளித்த டாக்டரின் பெயர் அங்கித் பரத் என்பதாகும். இந்தியாவின் மீரட் நகரில் பிறந்தவர் அங்கீத் பரத். பத்து மணி நேரம் கடுமையாக போராடி இந்த நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்திருக்கிறார்.
கொரோனா வைரஸ் கடந்த ஆறு மாத காலமாக இந்த உலகம் முழுவதும் தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது. இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. உலக அளவில் 75 லட்சம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில்தான் கொரோனாவின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருகிறது அங்கு மட்டும் 20 லட்சம் பேரை தாக்கியுள்ளது கொரோனா. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல்
கொரோனா வைரஸ் நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுவாசப்பிரச்சினைதான் அதிகம் ஏற்படுகிறது. மூச்சுக்குழல், நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு சுவாசம் தடைபட்டு மரணம் ஏற்படுகிறது. நுரையீரல் பிரச்சினை மட்டுமல்லாது இதயத்தையும், சிறுநீரகத்தையும் பாதிக்கிறது. கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளின் ரத்த நாளங்களையும், நரம்பு மண்டலங்களையும் பாதிக்கிறது.

நுரையீரல் சேதம்
அமெரிக்காவில் சிகாகோ மாகாணத்தில் 20 வயதான இளம் பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கியதில் அவரது இரண்டு நுரையீரல்களும் முற்றிலும் சேதமடைந்தது. மாற்று நுரையீரல் அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே அவர் உயிர் பிழைக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. அந்த பெண் பல நாட்கள் வெண்டிலேட்டர் உதவியோடு வாழ்ந்து வந்த அந்த பெண்ணிற்கு மூளைச்சாவு அடைந்த ஒருவரின் ஒரு ஜோடி நுரையீரல்கள் கிடைத்ததை அடுத்த உறுப்பு மாற்று ஆபரேசனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தியா வம்சாவளி டாக்டர்
பிரபல நுரையீரல் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணரான அங்கித் பரத் இதனை சவலாக எடுத்துக்கொண்டார்.
பல மணி நேரங்கள் போராடி அந்த பெண்ணுக்கு மாற்று நுரையீரல்களை பொருத்தினார். இதன் மூலம் அந்த பெண் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ள அந்த இளம்பெண்ணின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஆபரேசன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது.

கடினமான ஆபரேசன்
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய டாக்டர் பரத், உண்மையிலேயே இது சவாலான பணிதான். கடினமான மாற்று ஆபரேசனை செய்திருக்கிறோம் என்று கூறியுள்ளார். இதன் மூலம் கொரோனா நோயினால் நுரையீரல் பாதிக்கப்பட்டவர்கள் உயிர் பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை ஒளி பிறந்துள்ளது.

கொரோனாவில் இருந்து தப்பிய பெண்
அறுவை சிகிச்சைக்குப் பின்னர் பலமுறை பரிசோதனை செய்த பின்னரும் கொரோனா நெகடிவ் என்றுதான் வருகிறது. இதன் மூலம் அந்த பெண் முற்றிலும் குணமடைந்துள்ளார். அமெரிக்காவில் முதன் முறையாக கொரோனா பாதித்த பெண்ணிற்கு நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்து சாதனை புரிந்துள்ளனர். இது உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் மைல் கல்லாக கருதப்படுகிறது.

உறுப்பு மாற்று ஆபரேசன் வெற்றி
ஆஸ்திரியாவில் மே 26ஆம் தேதி இதே போல கொரோனா பாதித்த 45 வயது பெண்ணிற்கு நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சீனாவிலும் ஐரோப்பாவிலும் இதுபோல நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்யப்பட்டுள்ளது. சீனாவில் ஹாங்ஸோ மருத்துவமனையில் 66 வயதான பெண்ணிற்கு நுரையீரல் மாற்று ஆபரேசன் செய்துள்ளனர். மருத்துவர்கள் குழுவினர் 10 மணிநேரம் இந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்












Click it and Unblock the Notifications