உத்தரகாண்ட் தேர்தல்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி காங். கமிட்டி தலைவர் பாஜகவில் இணைகிறார்
டேராடூன்: உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக ஆளும் கட்சியாக உள்ளது. பாஜக ஆட்சியைத் தக்க வைக்க தீவிரம் காட்டுகிறது. ஆனாலும் பாஜகவில் உட்கட்சி பூசல் அனல் பறக்கிறது. இதேபோல் எதிர்க்கட்சியான காங்கிரஸிலும் உட்கட்சி அடிதடிகள் கொடிகட்டிப் பறக்கின்றன.
இதன் உச்சகட்டமாக உத்தரகாண்ட் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் கடந்த 12-ந் தேதி அக்கட்சியில் இருந்து அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். காங்கிரஸ் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாலும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாலும் அவர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இதனிடையே டிஸ்மிஸ் செய்யப்பட்ட கிஷோர் உபாத்யாய் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணையக் கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் சட்டசபை தேர்தலில் பாஜக வேட்பாளராக டெஹ்ரி தொகுதியில் களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆளும் பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். அதேநேரத்தில் காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களுடன் கடுமையான போட்டியைத் தரும் என்றும் அந்த கருத்து கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியும் குதித்துள்ளது.












Click it and Unblock the Notifications