உணவைத் திருடியதற்கு தண்டனை... உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட சிறுவன்... வைரலாகும் பகீர் வீடியோ!
திருட்டு செயலில் ஈடுபட்டதாக சிறுவன் ஒருவனை கொடூரமாக எரித்துக் கொல்லும் வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
அபுஜா: நைஜீரிய கடைகளில் உணவைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நைஜீரியாவின் லாகோஸ் பகுதியில் உள்ள கடை வீதியில் இந்த சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது. எரித்துக் கொல்லப்பட்ட சிறுவனுக்கு 7 முதல் 15 வயதிற்குள் இருக்கும்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் அச்சிறுவன் மீது பொதுமக்கள் வெறித்தனமாக தாக்குதல் நடத்துகின்றனர். தொடர்ந்து தன்னை விட்டு விடும்படி அச்சிறுவன் கெஞ்சிக் கொண்டே இருக்கிறான்.
ஆனால், சிறிதும் மனம் இளகாத அந்தக் கும்பல், பெட்ரோல் நிரப்பப்பட்ட டயரை சிறுவனின் கழுத்தில் மாட்டி தீ வைத்து கொளுத்தியுள்ளனர். இதில் பரிதாபமாக அச்சிறுவன் உயிரிழக்கிறான்.
இதற்கு முன்னர் சிலமுறை அப்பகுதி கடைகளில் உணவு, செல்போன் உள்ளிட்டவற்றை அச்சிறுவன் திருடியதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சம்பவம் குறித்து நைஜீரியா காவல்துறை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மொபைல் போனில் இந்த சம்பவம் படமாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.