இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்திலும் விஜய் மல்லையா சொத்துகள் முடக்கம் : லண்டன் நீதிமன்றம் உத்தரவு
இங்கிலாந்தில் உள்ள விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
லண்டன்: விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு கொண்டு வரும் வழக்கில், இங்கிலாந்தில் அவரது 10 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்க லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கிங் பிஷர் நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையா மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் உள்ளது. இந்திய வங்கிகளில் பல்லாயிரம் கோடி கடன் வாங்கி விட்டு அதை திருப்பி செலுத்தாமல் லண்டனில் பதுங்கி இருக்கிறார் என்று அவர் மீது இந்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

லண்டனில் இருக்கும் மல்லையாவை இந்தியா கொண்டு வந்து விசாரிக்க அனுமதி கோரும் வழக்கு லண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கை சி.பி.ஐ., மற்றும் வங்கிகள் தரப்பு தொடர்ந்து உள்ளது.
முன்னதாக இந்த வழக்கில் ஆஜரான விஜய் மல்லையா இந்திய அரசு தன்னை அரசியல் காரணங்களுக்காக பழி வாங்கப்பார்க்கிறது என்று குற்றம் சுமத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கின் மீதான விசாரணை நேற்று நடந்தது . அப்போது விஜய் மல்லையாவிற்கு இங்கிலாந்தில் உள்ள ரூ.10 ஆயிரம் கோடி சொத்துக்களை வருகிற 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை முடக்கி வைக்க கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் விஜய் மல்லையாவின் செலவுக்கு வாரம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் அளவுக்கு வழங்குவதற்கும் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இந்திய வங்கிகள் கேட்டுக்கொண்டதன் பேரில் அவருடைய சொத்துக்கள் முடக்கி வைக்கப்பட்டு இருப்பதால் இந்திய வங்கிகளுக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றியாக கருதப்படுகிறது. இங்கிலாந்திலும் விஜய் மல்லையா சில முக்கிய நிறுவனங்களை நடத்தி வருகிறார். அவருக்கு இங்கிலாந்தின் விர்ஜின் தீவுகளிலும் சொத்துக்கள் உள்ளன. இவற்றின் பெரும் பகுதி முடக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications