விஜய் மல்லையாவை இந்தியா கொண்டுவர கோரும் வழக்கு.. ஜூலை 6க்கு ஒத்திவைத்தது லண்டன் நீதிமன்றம்
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு லண்டன் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
லண்டன்: பல கோடி கடன் பெற்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ள தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த கோரும் மனு இன்று லண்டன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இந்தியாவிலுள்ள பல வங்கிகளில் சுமார் 9000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளவர் விஜய் மல்லையா. சட்டவிரோத பணபரிவர்த்தனை சட்டத்தின் கீழ், அவர் மீது மத்திய அமலாக்கத்துறை கிரிமினல் வழக்கு தொடர்ந்தது.
இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வரும் நிலையில், விஜய் மல்லையா தனது சிறப்பு பாஸ்போர்ட்டை பயன்படுத்தி திடீரென லண்டன் தப்பிச் சென்றுவிட்டார். லண்டனில் தலைமறைவாக தங்கி இருந்த அவருக்கு எதிராக சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப் பிரிவு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு எதிராக கோர்ட்டு மூலம் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது.
அவரை கைதுசெய்து அழைத்துவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது இந்திய அரசு. இதனையடுத்து, லண்டனில் தலைமறைவாக இருந்த விஜய் மல்லையா ஸ்காட்லாந்து யார்டு போலீசார் கடந்த ஏப்ரல் மாதம் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில், அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு, லண்டன் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இந்த வழக்கில், அவர் லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்தில் இன்று மாலை ஆஜரானார்.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது. அன்றைய தினமும் மல்லையா ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மல்லையாவுக்கு டிசம்பர் 4-ம் தேதி வரை ஜாமீனை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனிடையே, 'தன் மீதான வழக்கு விசாரணைக்கு வரும்போது, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குத் தடை விதிக்க வேண்டும்' என்று மல்லையா கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த வழக்கின் முடிவில் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவிட்டால், அடுத்த இரு மாதங்களுக்குள் இங்கிலாந்து உள்துறைச் செயலாளர் மல்லையாவை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.