அட காதலை இப்படிக்கூடச் சொல்லலாமா.. அசத்திய கொனர்.. உடனே சம்மதம் சொன்ன பாலா!
அயர்லாந்தில் ரயில் ஓட்டுனரான தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலை சொல்லியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.
டப்லின்: அயர்லாந்து நாட்டில் ரயில் ஓட்டுனரான தனது காதலியிடம் வித்தியாசமான முறையில் காதலைச் சொல்லி அசத்தியிருக்கிறார் இளைஞர் ஒருவர்.
ஒருவருக்குள் மிக எளிதாக வந்துவிடுகிறது காதல். ஆனால் அதை சம்பந்தப்பட்ட நபரிடன் சொல்வது தான் மிகப் பெரிய சவால். நம்மூரில் இன்றும் பல இளைஞர்கள் இதயம் பட முரளி போல் தான் காதலை மனதில் பூட்டி வைத்துக்கொண்டு சுற்றித்திருகிறார்கள்.
"உன்ன நினைத்து பார்க்கையில் கவிதை கொட்டுது.. அதை எழுத நினைக்கையில் வார்த்தை முட்டுது", என 'குணா' கமல் போல காதல் கடிதம் எழுதுவதற்கே தலைகீழாக நின்று தண்ணீர் குடிப்பார்கள். இன்னும் சிலரோ தங்களுடைய காதலின் வலிமையை உணர்த்த ரத்தத்தால் காதல் கடிதம் எழுதுவது என்பது உள்பட பல விஷயங்களை செய்வார்கள்.
நிஜ ரெமோக்கள்
ஆக காதலிப்பதை விட அந்த காதலை காதலரிடம் சொல்வது தான் கடினமான விஷயம். அதில் அந்த காதல் புரொபோசல் மனதில் பதியும் வகையில் அமைந்தால் மட்டுமே நினைவுகளில் அசைபோட முடியும். எனவே சினிமாக்களில் வருவது போல நிஜ வாழ்க்கையில் ரெமோ சிவகார்த்திகேயன் ரேஞ்சுக்கு யோசிப்பார்கள்.
வித்தியாசமான புரொபோசல்
அப்படித்தான் அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலியிடம் வித்தியாசமாக காதலை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். அயர்லாந்து நாட்டில் ரயில் ஒட்டுராக பணியாற்றி வருபவர் பாலா எனும் பெண்மணி. இவரை கொனர் எனும் இளைஞர் மிகத் தீவிரமாக காதலித்து வந்தார்.
காதல் பதாகைகள்
இந்நிலையில் பணியில் இருந்த பாலா ரயிலை ஓட்டி வந்துகொண்டிருந்தார். பியர்ஸ் ரயில் நிலையத்தில் நுழைந்த போது அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது. ரயில் நடைமேடையில் காதல் புரொபோசல் பதாகைகளை அடுக்கி வைத்து தனது காதலை வெளிப்படுத்தி இருந்தார் கொனர்.
சம்மதம்
இதைப்பார்த்த பாலாவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ரயிலைவிட்டு இறங்கி வெளியே ஓடிச்சென்று கொனரை கட்டியணைத்து காதலை ஏற்றுக்கொண்டார். சினிமா பாணியில் நிகழ்ந்த இந்த காதல் புரொபோசலை ரயில் நிலைய ஊழியர்களும், பயணிகளும் வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
வாய்ப்பில்ல ராசா
இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. கொனருக்கும், பாலாவுக்கும் வாழ்த்து மழை குவிந்து வருகிறது. கொனரைப் பார்த்து இன்னும் எத்தனைப் பேர் இது போல் காப்பியடிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அதாவது சென்னை போன்ற மாநகரங்களில் இது சாத்தியமேயில்லை. ரயில் வருவதைப் பார்த்து ஓடி வரும் பயணிகளுக்கு முன் பாதாகைகள் எல்லாம் எம்மாத்திரம் மக்களே...