தாவி ஓட வைக்க கல்லால் அடித்த பார்வையாளர்கள்... பரிதாபமாக உயிரிழந்த கங்காரு!
சீனாவில் பார்வையாளர்கள் கங்காருவை கல்லால் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீஜிங் : சீனாவில் உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செங்கற்களால் தாக்கியதில் கங்காரு ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. மற்றொரு கங்காரு காயமடைந்தது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சீனாவின் தென்கிழக்கு பகுதியில் ஃயூஜியன் மாகாணத்தில் உள்ள ஃபூலோவ் உயிரியல் பூங்காவில் ஏராளமான கங்காருகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இங்கு வரும் பார்வையார்கள் கங்காருகளை துள்ளி குதித்து ஓட வைப்பதற்காக கற்களை தூக்கி எறிவது வாடிக்கையாக உள்ளது.

உயிரியல் பூங்கா நிர்வாகித்தினர் முறையாக கண்காணிக்காததால் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன. கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி பார்வையார்கள் கல்லால் அடித்ததில், 12 வயதான பெண் கங்காரு ஒன்றுக்கு காலில் அடிபட்டது. பின் அது சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் இறந்தது.
இந்த சம்பவம் நிகழ்ந்த சில வாரங்களில், அதே உயிரியல் பூங்காவில் உள்ள 5 வயதான ஆண் கங்காரு ஒன்றும் இதேபோல் தாக்கப்பட்டுள்ளது. அந்த கங்காருவுக்கு காலில் லேசாக அடிப்பட்டுள்ளது. வியாழக்கிழமை இரவு இதுபற்றிய செய்தி வெளியானதைத் தொடர்ந்து, விலங்கியல் ஆர்வலர்கள் கொந்தளிக்கத் தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து இதுபோன்ற தடுக்க, பார்வையார்களை கட்டுப்படுத்தும், கண்காணிக்கவும் சி.சி.வி.டி. கேமராக்கள் பொருத்த பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்து, கற்களை அகற்றிய பின்பும் வேறு இடத்தில் இருந்து கற்களை கொண்டு வரும் சுற்றுலாப் பயணிகள் விலங்குகளை தாக்குவதாக உயிரியல் பூங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கற்களை வீசிய சுற்றுலா பயணிகள் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் உயிரியல் பூங்காக்கள் சரிவரக் கண்காணிக்கப்படுவது இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அடிக்கடி இது போன்று பூங்கா விபத்துக்களில் விலங்குகள் அல்லது மனிதர்கள் காயமடைவது அங்கு தொடர்கதையாகி வருகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அங்குள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி தாக்கியதில் பார்வையாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications