"டிராகனும் - யானையும்".. மோடியிடம் ஜி ஜின்பிங் சொன்ன வார்த்தை.. வலுவாகும் இந்தியா - சீனா உறவு
பெய்ஜிங்: சீனாவில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு முன்னதாக பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்து இருநாடுகளின் உறவை மேம்படுத்துவது பற்றி பேசினர். அப்போது ஜி ஜின்பிங், ‛‛டிராகனும், யானையும் நண்பனாக இருக்க வேண்டியது முக்கியம்'' என்று கூறினார். இதில் டிராகன் என்பது சீனாவையும், யானை என்பது இந்தியாவையும் குறிக்கும். இதனால் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலான பகை முற்றிலுமாக விரைவில் முடிவுக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்பு இந்தியாவையும், சீனாவையும் ஒன்று சேர்த்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு கல்வானில் எல்லை பிரச்சனை ஏற்பட்டது. இந்தியா - சீனா வீரர்கள் மோதிக்கொண்டதோடு, உயிரிழப்பும் ஏற்பட்டது. இதையடுத்து, இந்தியா - சீனா உறவு மோசமானது. இருநாடுகளின் தலைவர்கள் இடையேயான உறவு முற்றிலுமாக முறிந்தது.

ஆனால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி நடவடிக்கை இருநாடுகளையும் ஒன்றிணைத்துள்ளது. நமக்கு 50 சதவீதம் வரி போட்டதை போல் டிரம்ப் சீனாவுக்கும் 135 சதவீத வரி போட்டு 30 சதவீதத்தை செயல்படுத்தி உள்ளார். மீதமுள்ள வரியையும் டிரம்ப் எப்போது வேண்டுமானாலும் சீனாவுக்கு அமல்படுத்தலாம். இதனால் இருநாடுகளின் ஏற்றுமதி அமெரிக்காவில் சரியலாம்.
இதனால் இந்தியாவை போல் சீனாவுக்கும் பிரச்சனை வரலாம். எனவே இந்தியாவும், சீனாவும் கைகோர்த்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி முதல் முதலாக சீனா சென்றுள்ளார். சீனாவின் தியான்ஜின் நகரில் இன்றும், நாளையும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி அங்கு சென்றார். மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை வரை பிரதமர் மோடி அங்கு இருப்பார்.
இந்நிலையில் தான் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் முதல் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேசினார். இருநாடுகள் இடையேயான உறவை மேம்படுத்துவது தொடர்பாக அவர்கள் இருவரும் ஆலோசித்தனர். குறிப்பாக எல்லை பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றி மோடி - ஜி ஜின்பிங் பேசினர்.
இந்த மீட்டிங்கின்போது ஜி ஜின்பிங் இந்தியாவும், சீனாவும் சண்டையின்றி சேர்ந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். இதுதொடர்பாக ஜி ஜின்பிங் பேசுகையில், ‛‛கிழக்கு பகுதியின் பண்டைய நாகரிகங்களை கொண்ட நாடாக சீனாவும், இந்தியாவும் உள்ளது. இருநாடுகளும் அதிக மக்கள்தொகையை கொண்டுள்ளது.

இருநாடுகளின் நல்வாழ்வை மேம்படுத்துவது, வளரும் நாடுகளை ஊக்குவித்து ஒற்றுமையை ஏற்படுத்துவது, மனித சமூகத்தின் முன்னேற்றத்தை தொடர்ந்து மேம்படுத்துதல் உள்ளிட்ட பொறுப்புகள் நம் இருவருக்கும் உள்ளது.
நல்ல நட்பு நாடாகவும், நல்ல நண்பனாகவும், ஒருவருக்கொருவர் வெற்றியை அனுமதிக்கும் நாடாகவும் டிராகனும் - யானையும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம்'' என்றார். இதில் டிராகன் என்பது சீனாவையும், யானை என்பது இந்தியாவையும் குறிக்கும். இதன்மூலம் இருநாடுகளும் சேர்ந்து முன்னேற்ற பாதையில் பயணிக்க வேண்டும். இருநாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபடக்கூடாது என்பதை ஜி ஜின்பிங் வெளிப்படுத்தி உள்ளது. இது இந்தியா - சீனா உறவின் புதிய அத்தியாயமாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications