"மோடியை மிரட்டுவது ஆபத்து.." புதின் சொன்ன வார்த்தை.. அப்படியே டிரம்ப் மீதும் பாய்ச்சல்
மாஸ்கோ: இந்தியா ரஷ்யா இடையே பல காலமாக நல்லுறவு இருந்து வருகிறது. இதற்கிடையே ரஷ்யா உடனான உறவுகளைத் துண்டிக்கச் சொல்லி பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுப்பது பயனற்றது என்றும் இது இருதரப்பு உறவுகளையும் மிகக் கடுமையாகப் பாதிக்கும் என்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். அமெரிக்காவை மறைமுகமாக விமர்சித்து அவர் கூறியுள்ள இந்தக் கருத்துகள் பேசுபொருளாகியுள்ளது.
பொதுவாகப் பெரும்பாலான உலக நாடுகள் அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும்.. அல்லது ரஷ்யாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும். ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை, இரு தரப்பு உடனேயே நல்லுறவைக் கொண்டு வருகிறது. கடந்த 25 ஆண்டுகளில் இந்தியா அமெரிக்கா இடையேயான உறவு பல மடங்கு மேம்பட்டுள்ளது. ரஷ்யாவுடன் நமக்கு பல தலைமுறைகளாகவே நல்லுறவு இருக்கிறது.

இந்தியா- ரஷ்யா
இதற்கிடையே இந்தியா தொடர்பாகவும் பிரதமர் மோடி தொடர்பாகவும் ரஷ்ய அதிபர் புதின் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். புனித பீட்டர்ஸ்பர்க்கில் சர்வதேச ஊடகங்களின் தலைவர்களுடன் நடந்த சந்திப்பில் பேசிய ரஷ்ய அதிபர் புதின், இந்தியா - ரஷ்யா இடையிலான நட்புறவை அமெரிக்கா சிதைக்க முயல்வதாக மறைமுகமாகத் தாக்கியுள்ளார்.
புதின்
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது மற்றும் ராணுவ ரீதியான உறவுகளைப் பராமரிப்பது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால், இதைப் பற்றி தாங்கள் கவலைப்படுவதில்லை என்று சொல்லியுள்ள புதின், "பிரதமர் மோடியை அழுத்தத்திற்கு உள்ளாக்குவது என்பது மிகவும் பயனற்ற காரியம். உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டை வழிநடத்தும் மோடிக்கு அழுத்தம் தருவது, சர்வதேச உறவுகளுக்கே நல்லதல்ல" என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கவலை இல்லை
அமெரிக்காவுடன் இந்தியா தனது உறவைப் பலப்படுத்திக் கொண்டாலும், அதை ஒருபோதும் ரஷ்யா அச்சுறுத்தலாகப் பார்க்கவில்லை என்று புதின் உறுதியாகத் தெரிவித்துள்ளார். அவர் மேலும், "இந்தியாவுடன் நாங்கள் உறவை வளர்த்து வருகிறோம், அதைத் தொடர்ந்து செய்வோம். எங்களைப் பொறுத்தவரை, இந்தியா ஒரு மிகவும் நம்பிக்கையான பார்ட்னராகவே இருக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், வரும் காலங்களில் 100 பில்லியன் டாலர் இலக்கை எட்டும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தியா ஒரு பெரிய ஜனநாயக நாடு என்பதையும், தனது நாட்டு நலன் முடிவெடுக்கும் தலைவரை நாடு என்பதையும் புதின் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications