ஸ்பெயினில் வகுப்பறையில் ‘அம்பு’ எய்து ஆசிரியரைக் கொன்ற 13 வயது மாணவர்
பார்சிலோனா : ஸ்பெயின் நாட்டில் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவரை 13 வயது மாணவர் அம்பு எய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பிய நாடான ஸ்பெயினில் 2-வது பெரிய நகரம் பார்சிலோனா. நேற்று அங்குள்ள பள்ளி ஒன்றின் வகுப்பறையில் ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது 13 வயது மாணவர் ஒருவர் மறைத்து வைத்திருந்த வில்லின் அம்பை ஏற்றி, ஆசிரியர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.

இதில் சம்பவ இடத்திலேயே அந்த ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தாக்குதலின் போது மேலும் 2 ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கும் காயம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், ஆசிரியரைக் கொன்ற மாணவரைக் கைது செய்தனர். மேலும் காயமடைந்தவர்களையும் மருத்துவமனையில் சேர்த்தனர்.
கைது செய்யப்பட்ட மாணவரின் ஸ்கூல் பேக்கை சோதனையிட்டதில், அதில் வில் அம்பு மற்றும் வெட்டுக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எதற்காக இந்த ஆயுதங்களை மாணவர் பள்ளிக்கு கொண்டு வந்தார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், தாக்குதல் நடத்திய மாணவர் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே, அம்மாணவனை மனநல மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதனை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியரைக் கொன்ற மாணவருக்கு 13 வயதே ஆவதால், அவன் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க இயலாது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
வகுப்பறையில் மாணவர் ஆசிரியரைக் கொலை செய்த தகவல் அறிந்து, பள்ளிக்கு முன்பு பெற்றோர்கள் கூட்டம் கூடியது. இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.












Click it and Unblock the Notifications